தினகரன் 31.08.2012
கல்லக்குடி, புள்ளம்பாடியில் 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்த தடை நாளை முதல் அமல்
லால்குடி, : கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி, புள்ளம்பாடி பேரூராட்சி பகுதிகளில் நாளை (1ம் தேதி) முதல் 40 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், கப்புகள், விரிப்புகள் போன்றவற்றை வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் வியாபாரிகள் மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்கக்கூடாது. இதனை வாடிக்கையாளர்களும் வாங்க கூடாது. இந்த அறிவிப்பை மீறி விற்பனை செய்வோர், பிளாஸ்டிக் கழிவை தரம் பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காத கடைகளுக்கும் முதல் எச்சரிக்கையாக ரூ.250, இரண்டாம் முறையாக ரூ.500, மூன்றாம் தடவை ரூ.1000 என அபராதம் விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளருக்கு முறையே ரூ.100, 200, 500 என அபராதம் விதிக்கப்படும். மீறினால் கடைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைகளுக்கு சீல் வைத்து குற்றவியல் சட்டத்தின் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும். வசூலிக்கப்பட்ட அபராத தொகை பேரூராட்சி நிதிக்கணக்கில் வரவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.