தினமணி 12.04.2013
போடியில் ரூ.10 லட்சத்தில் சாலையோரப் பூங்கா
போடி நகராட்சி சார்பில், நிதியமைச்சர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக நிதியமைச்சரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் சுப்புராஜ் நகரில் உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் குப்பைக் கொட்டுவதாலும், திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாலும் சுகாதாரக் கேடான நிலை காணப்பட்டது.
இதையடுத்து, இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், இப்பகுதியை அழகுபடுத்தும் வகையிலும் சாலையோரப் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, போடி சுப்புராஜ் நகர், வஞ்சி ஓடையின் மேற்குப் பகுதியில் 800 மீட்டர் நீளத்துக்கு சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், வண்ண மலர்ச் செடிகள், நிழல் தரும் மரங்கள் நடும் நிகழ்ச்சி, போடி நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.