தினமணி 23.09.2009
மரம் நடுதல்: உலக அளவில் இந்தியா 9-வது இடம்
நியூயார்க், செப். 22: ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டம் 2006-ல் அறிமுகப்படுத்திய 100 கோடி மரங்களை நடுதல் திட்டத்தை செயல்படுத்திய நாடுகளின் வரிசையில் இந்தியா 9-வது இடம் வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள், அரசு முயற்சிகள் மூலம் நடும் மரங்களின் எண்ணிக்கையை அந்தந்த நாடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் 96 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 167 நாடுகள் பங்கு பெற்றிருக்கின்றன. இதன்படி உலகம் முழுவதும் 100 கோடி மரங்களை வருடந்தோறும் நடவேண்டும் என்று ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டம் உத்தேசித்தது.
2007-ல் 100-வது கோடியைப் பூர்த்தி செய்து, அதன் அடையாளமாக ஆலிவ் மரம் எத்தியோப்பியாவில் நடப்பட்டது.
இந்தியாவில் நடப்பட்ட அனைத்து மரங்களின் எண்ணிக்கையும் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் உலகளவில் மரம் நடுதலில் இந்தியா உயர்ந்த இடத்தில் இருந்திருக்கக்கூடும் என்று ஐ.நா.சுற்றுச்சூழல் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.