Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"3,000 எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதியில் இயக்கப்படும்'

Print PDF

தினமணி             24.09.2013

"3,000 எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதியில் இயக்கப்படும்'

சென்னையில் இந்த வார இறுதிக்குள் 3 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதிக்குள் இயக்கி வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இப்போது பல்வேறு இடங்களில் சோடியம் ஆவி தெரு விளக்குகள் உள்ளன. இப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் சேர்த்து 2.50 லட்சத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன.

இப்போது உள்ள தெரு விளக்குகளை இயக்க அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் மின்சார தேவையைக் குறைக்க எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் 1.10 லட்சம் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 13,000 எல்.இ.டி. மின் விளக்குகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் 3,000 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் 10,000 விளக்குகள் கொள்முதல் செய்யும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 97 ஆயிரம் விளக்குகளுக்கு படிப்படியாக டெண்டர் வெளியிடப்பட்டு பொருத்தப்பட்டு விடும்.

தானியங்கி கருவி பொருத்துவதில் சிக்கல்: தெரு விளக்குகளை தூரத்தில் இருந்தே இயக்கும் வகையிலான கருவிகள் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள 29 மின் கம்பங்களில் பொருத்தப்பட்டு சோதனை முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இது நல்ல பயனை கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை மாநகராட்சி முழுவதும் விரிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருவியை நிறுவ அதிக செலவாகும். இப்போது செலவுகளைக் குறைத்து, இந்த கருவிகளை நிறுவ முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.