தினமணி 3.11.2009
அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை
திண்டுக்கல், நவ. 2: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது தடை செய்யப்படுவதாக ஆட்சியர் மா. வள்ளலார் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை:
பிளாஸ்டிக் பைகள், பொருள்கள் மற்றும் கழிவுகளினால் மண் வளமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் மண்வளம் பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சல் குறைகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் மண்களில் புதைவதால் மழைநீர் பூமிக்கு அடியில் செல்வது தடுக்கப்படுகிறது. பாலித்தீன் பைகள் புதையுண்டு அழிவதற்கு 300 ஆண்டுகளுக்கு மேலாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் டையாசின்,ப்பூரான் என்ற விஷ வாயுக்கள் காற்றில் கலப்பதால் புற்றுநோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றின் நச்சுத் தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியை விட்டு மறையாது. எனவே பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.
மாணவ, மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமையை விளக்குவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு வளங்கள் கிடைக்கும்.இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் பூமிக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகப் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.