தினமணி 6.11.2009
நெல்லையை பிளாஸ்டிக் குப்பை இல்லா நகரமாக்கத் திட்டம்
திருநெல்வேலி, நவ. 5: திருநெல்வேலி மாநகராட்சியை பிளாஸ்டிக் குப்பை இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை சேகரித்து கொடுப்போருக்கு கிலோவுக்கு ரூ. 1 வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம் மாநகராட்சியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்கள் மற்றும் மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகள், தெருக்கள், தனியார் இடங்கள், கால்வாய்கள் என பல்வேறு இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
இவற்றில் 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை சேகரித்து வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம்.
பேட்டை, பெருமாள்புரம், மகராஜநகர், தச்சநல்லூர் ஆகிய அலகு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒப்படைத்து அதற்கான பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். அவை எத்தனை கிலோவாக இருந்தாலும் பெற்றுக் கொள்ளப்படும். இம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.