தினமணி 17.11.2009
ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் மேலாண்மைக் குழு
தூத்துக்குடி, நவ. 16: பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் மேலாண்மைக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது,
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள் போன்றவை சுற்றுச்சூழல் பாதிப்பையும், நகரத்தின் தூய்மையையும், அழகையும் கெடுப்பதாக உள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட அளவிலான பிளாஸ்டிக் மேலாண்மை குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் மாவட்ட சுற்றுப்புறச் சூழல் நலப் பொறியாளர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், எம்பவர் தொண்டு நிறுவன இயக்குநர், கோவில்பட்டி நகராட்சி ஆணையர், திருச்செந்தூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. பிளாஸ்டிக் குப்பைகளை மாநகராட்சி, நகராட்சிகள் தரம் பிரித்து அவற்றை திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு இந்த கழிவுகள் சிமெண்ட் உலையில் வைத்து நிலக்கரியுடன் சேர்த்து எரிக்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, திருச்செந்தூர் பேரூராட்சிகளில் வீடுகள் தோறும் மக்கும் குப்பைகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் பிரித்து பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
÷தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளற்ற மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.