தினமணி 01.12.2009
திருப்பரங்குன்றத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை
திருப்பரங்குன்றம், நவ. 30: பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதித்து திருப்பரங்குன்றம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் ரா.காந்திமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
நகராட்சி துணைத் தலைவர் எம்.அக்னிராஜ், நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் திருப்பரங்குன்றத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. மேலும், முதல் மற்றும் மூன்றாவது வார்டு பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வாய்க்கால் அமைப்பது எனவும், திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் எச்சில் இலைகளை சாலை, தெருக்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 10 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பாண்டிச்செல்வி துப்புரவுப் பணி சரியாக நடைபெறவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து நகராட்சித் தலைவர் காந்திமதி கூறுகையில், அதிமுக கவுன்சிலர் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.