தினமணி 03.12.2009
நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
நாகர்கோவில், டிச. 2: நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியை புதன்கிழமை மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தி சாலையின் இருபுறமும் நின்றிருந்தனர். பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மேலும் திருநெல்வேலியிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் லாரிகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.