தினமணி 04.12.2009
உணவகங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தடை
திருநெல்வேலி, டிச. 3: திருநெல் வேலியில் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என, மேயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில், உணவகங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத் துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேயர் அ.லெ.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். ஆணையர் கா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர்கள் சுப.சீதாராமன், எஸ்.எஸ். முகமது மைதீன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் பேசியதாவது: மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர ஏனைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை ஒழிப்பதற்கு திருமண மண்டபம் மற் றும் உணவகங்களின் உரிமையாளர் கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப் புத் தர வேண்டும்.
திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய வருவோர்களி டம், மண்டபத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத் தக்கூடாது என்பதை உரிமை யாளர்கள் கண்டிப்புடன் கூற
வேண்டும். மக்காத குப்பைகளைத் தனியாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும். இதற்கென தனியாக தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பேசிய உணவக உரிமையாளர்கள் பலர், சாலைகளில் சுற்றித் திரியும் மாடு கள் தொட்டிகளில் உள்ள எச்சில் இலைகளை வெளியே இழுத்துப் போடுகின்றன என்றும் மாடுக ளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. மேலும், நடைமேடைகளில் பயணிகள் நடந்து செல்லவும் இடையூறாக உள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதுகுறித்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று ஆணையர் உறுதிய ளித்தார்.