தினமணி 11.12.2009
ஒகேனக்கல்லில் டிச. 15 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை
தருமபுரி, டிச.10: ஒகேனக்கல்லில் டிசம்பர் 15-ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.அமுதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் அதிக அளவு வருகின்றனர்.
அவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருள்களால் இப்பகுதிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுவருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் வனத்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறையினர் பென்னாகரம், ஊட்டமலை சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்யவுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.