தினமணி 31.12.2009
பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி, டிச.29: சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தடை செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. புத்தளம் எல்.எம்.பி.எம் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் விவேகானந்தபுரம் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருள்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஹரிராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கிருபானந்தராஜன் கூறியதாவது:
சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடர்பாக பழனி, வேளாங்கண்ணி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருவாரூர், நாகூர், திருத்தணி உள்ளிட்ட 9 வழிபாட்டு தலங்கள், கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட 6 சுற்றுலா தலங்களிலும் ரூ 2 லட்சம் வீதம் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பிளாஸ்டிக் தடுப்பு விளம்பரப் பலகைகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ள கடைகளில் அவற்றை பறிமுதல் செய்து காகித டம்ளர்களை வைப்பது, பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை அமல்படுத்துவது கையாளப்படும் என்றார் அவர்.