தினமணி 08.01.2010
பாலிதீன் குப்பைகளை அகற்றிய 2 ஆயிரம் மாணவர்கள்
ராமேசுவரம், ஜன. 7: ராமேசுவரம் தீவு முழுவதும் குவிந்து கிடந்த பாலிதீன் பைகள், கப்புகளை 2 ஆயிரம் மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
ராமேசுவரம் தீவில் பாலிதீன் பை, கப்கள் குவிந்து கிடப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படைந்தும், நோய் உருவாகியும், தீவின் அழகும் சீரழிந்து வருகிறது. இந்த பாலிதீன் பொருள்களுக்கு 2001-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து அமல்படுத்த ஜனவரி 6-ம் தேதி உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து வியாழக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், பஸ் நிலையம், வேர்கோடு, திட்டகுடி, ரயிóல் நிலையம் மற்றும் தங்கச்சிமடம், சூசையப்பர் பட்டினம், எம்ஜிஆர் நகர், சாலைகளின் இருபுறங்கள், பாம்பனில் சாலையின் இருபுறத்திலும் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், பைகளை பள்ளி மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
இதில் ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளிகளின் என்எஸ்எஸ், ரெட்கிராஸ் மாணவ, மாணவிகள் சுத்தம் செய்தனர்.
இந்த முகாமில் உதவி ஆட்சியர் ஜெயராமன், ராமேசுவரம் தாசில்தார் ராஜாராமன், என்எஸ்எஸ் அலுவலர் ஜெயகாந்தன், ஆசிரியர் பால்டுவின் உள்ளிட்ட அனைத்து பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.