தினகரன் 12.01.2010
பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று ஏற்பாடு பேப்பர் கப் உற்பத்தி தொழில் பயிற்சி
நெல்லை : பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று ஏற்பாடாக பேப்பர் கப் உற்பத்தி தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நெல்லையில் இன்று இதற்கான நேர்காணல் நடக்கிறது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்வளர்ச்சி நிலைய(கிளை) உதவி இயக்குனர் குட்டிராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுப்படுவ தோடு, கால்நடைகளில் உயிருக்கு ஆபத்தாகவும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கு தடைவிதித்தார். இதனால் பெரும்பாலானா பகுதியில் பேப்பர் கப், பேப்பர் பை உபயோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை பேப்பர் பொருட்கள் மூலம் ஈடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம்(கிளை) மாவட்டத்தில் பேப்பர் கப் உற்பத்தி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை 10 மணிக்கு எம்.எஸ்.எம்.இ டி.ஐ பேட்டை அலுவலக வளாகத்தில் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடக்கிறது. இதில் பேப்பர் கப் உற்பத்தி தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.