தினகரன் 13.01.2010
பிளாஸ்டிக்&பாலித்தீன் ஒழிப்பு பிரசாரம்
ராமநாதபுரம் : சபரிமலையில் உள்ள வனங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மாசுபடுவதுடன் காடுகளில் உள்ள விலங்குகள் பெரிதும் பாதிப்படைகின்றன. இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவித்து இருந்தனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் உள்ள 500 பக்தர்கள் இந்த வருடம் சபரிமலைக்கு செல்லும்போது எந்தவித பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை எடுத்து செல்லவில்லை. அத்துடன் கிளீன் சபரிமலை என்ற வாசகம் அடங்கிய பேனர்கள் மற்றும் தங்களது இருமுடி பையில் பிளாஸ்டிக் தவிர்ப்பீர் என்ற வாசகங்களை எழுதியுள்ளனர்.
இதை அறிந்து சபரிமலை திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை வந்த பக்தர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகியும் குருசாமியுமான மோகன்சாமிக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெயக்குமார். கேரள சன்னிதானம் காவல்துறை எஸ்பி வேணுகோபால் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்று சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலேயே முதன்முறையாக ஐயப்பக்தர்களுக்கு வரவேற்வு அளித்து அங்குள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளுக்கும் ஐயப்பக்தர்களின் விழிப்புணர்வு பிரசாரம் குறிதது தேவஸ்தான அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.