தினமலர் 04.02.2010
பிளாஸ்டிக் கப், பை கூடாது : பேப்பர் கப் பயன்படுத்தலாம்
திருவள்ளூர் : நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஓட்டல்கள், தெருவோர கடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கப்புக் களை பயன்படுத்தக் கூடாது. பேப்பர் கப்புக்களை மட்டுமே பயன்படுத்தலாம் என திருவள்ளூர் நகராட்சி தீர்மானித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டல்கள், உணவகங்கள், தெருவோர கடைகள், டீ கடைகள் ஆகியவற்றில் உணவு, காபி, டீ ஆகியவற்றை வழங்க பிளாஸ்டிக்கினால் ஆன கப், கவர் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால், நகரில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஓட்டல்கள், உணவகங்கள், தெருவோர கடைகள், டீகடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கப், பை ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, வாழை இலை, பேப்பர் கப் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் நகரில் மக்கும் குப்பைகள் எண்ணிக்கை அதிகரித்து மக்கா குப்பைகள் தேக்கம் குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பையும் தடுக்க முடியும். இவ்வாறு நகராட்சி கருதுகிறது.