Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

Print PDF
தினமணி 09.02.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

நாகர்கோவில், பிப். 8: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். இதையொட்டி வீடுகளுக்கு கோணிப் பைகளை அவர் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13.1.10-ம் தேதி பிளாஸ்டிக் பொருள்களை வீடுகளில் இருந்து நகராட்சிப் பணியாளர்களால் சேகரிக்கும் நடைமுறைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் ராமவர்மபுரம் வெள்ளாளர் காலனி கிழக்குத் தெரு, கோட்டார் வாகையடி தெற்குத் தெரு, கோட்டார் குலாளர் தெருக்களில் இப் பணி தினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் பிளாஸ்டிக் கழிவுகளை வீடுகளில் இருந்து சேகரிக்க கிறிஸ்துநகர் வாட்டர்டேங்க் சாலை, வீலர்ஸ் காலனி தெரு, பெரியவிளை ராமலிங்கதெரு ஆகியவை மாதிரித் தெருக்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சிப் பணியாளர்கள் மூலம் சேகரித்த பின்னர் அவை சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாகப் பயன்படுத்தகு அனுப்பப்படும். 1.4.10 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தை சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் பொருள்கள் குறிப்பாக கேரிபேக்ஸ் தடை செய்யப்பட்ட மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் அ. ராஜன், நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்த ராஜன், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:14