தினமணி 10.02.2010
ராமேசுவரத்தில் ரூ.25000 மதிப்பு பாலிதீன் பொருள்கள் பறிமுதல்
ராமேசுவரம், பிப்.9: ராமேசுவரம் கடையில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.ராமேசுவரம் தீவில் சுற்றுசூழல், கடல்வளத்தைப் பாதுகாத்திட பாலிதீன் பை, கப்புகள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதையடுத்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் பாலிதீன் பொருள்கள் பயன்பாடு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரு சில வணிக கடைகள், டாஸ்மாக் கடைகளில் பாலிதீன் பை, கப்புகள் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ராமேசுவரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி தலைமை எழுத்தர் சுப்பிரமணி, நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்பு சங்கத் தலைவர் களஞ்சியம் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் ராமேசுவரம் கடைத் தெருவில் உள்ள குடோன், மார்கெட் தெருவில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்தினர்.இதில் ரூ. 25ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. தொடர்ந்து பாலிதீன் பொருள்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படும் என தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார்.