தினமணி 25.02.2010
கன்னியாகுமரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி, பிப். 24: கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பிளாஸ்டிக் பொருள்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா, பேரூராட்சித் தலைவர் எப். கோல்டா எழிலன், துணைத் தலைவர் பி. வின்ஸ்டன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆட்சியர் பேசியதாவது: கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் வந்துசெல்லும் இடமாகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துகின்றனர்.
மேலும், கன்னியாகுமரி பேரூராட்சிப் பகுதிகளில் குப்பைகளை எரிப்பதால் நச்சுப்புகை வெளியாகிறது. டயாக்ஸின், பியூரான் உள்ளிட்ட விஷத்தன்மை வாய்ந்த நச்சு வாயுக்களால் புற்றுநோய், காசநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.
இதனால், குப்பைகளை தெருக்களிலும், வீடுகளிலும் எரிப்பதை தடுக்க வேண்டும். மேலும், நாகர்கோவில் நகராட்சியில் இருந்து 26 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் பயன்படுத்தாத தனியார் தங்கும் விடுதிகள், கடைகளுக்கு தனி விருதுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் என்றார் அவர்.