தினமலர் 01.03.2010
பிளாஸ்டிக் போனது துணி பைகள் வந்தது
குளச்சல்:மண்டைக்காட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகள் பயன்படுத்தப்படுகிறது.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவை முன்னிட்டு கோயில் சுற்று பகுதிகளில் தற்காலிகமாக திருவிழா கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கடையில் வாங்கும் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கொடுப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதால் மண்டைக்காட்டில் பெரும்பாலான கடைகளில் பகவதி அம்மன் படம் பொறிக்கப்பட்ட துணி பைகள் அதிக அளவு வைக்கப்பட்டுள்ளன.பக்தர்களும் பொருட்களை துணி பையில் வாங்கி செல்கின்றனர். ஆனால் சில கடைகளில் மறைமுகமாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த படுவதாகவும் கூறப்படுகிறது.