தினமணி 15.03.2010
பாம்பனில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்
ராமேசுவரம், மார்ச் 14: பாம்பனில் கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பை, கப்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம் தீவு பகுதியில் பாலிதீன் பை, கப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ம் தேதிக்கு மேல் விற்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 90 சதவீதம் பாலிதீன் அகற்றப்பட்ட நிலையில் தங்கச்சிமடம், பாம்பனில் பெரும்பாலான வணிகக் கடைகளில் பாலிதீன் பை, கப்கள் விற்கப்படுவதாக ராமேசுவரம் தாசில்தார் முருகேசனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து தாசில்தார் தலைமையில் ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்பு சங்க நிர்வாகி கண்.இளங்கோ உள்ளிட்ட வருவாய்த் துறையினர், பாம்பன் மார்க்கெட் தெரு, பஸ் நிறுத்தம், ரயில் நிலையம் அருகில் உள்ள வணிகக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனர்.
இதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பை, கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அவை அழிக்கப்பட்டன.