தினமலர் 27.03.2010
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தேனியில் பறிமுதல்
தேனி : தேனி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு முறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகளை நகராட்சி பகுதிகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்காத குப்பைகளான இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் புதைவதால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கிறது. கழிவு நீர் கால்வாய்களில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகின்றன. இவைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் கமிஷனர் மோனி உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் தயாளன் தலைமையில், உணவு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். பெரியகுளம் ரோடு, காளியம்மன் கோயில் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, கடற்கரை நாடார் சந்து உட்பட பல பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்