தினமலர் 31.03.2010
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு 'சீல்' :பேரணாம்பட்டு நகராட்சியில் தீர்மானம்
பேரணாம்பட்டு : பேரணாம்பட்டில் கழிவு நீரை திறந்துவிட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வஜ்ரம் தோல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் தலைவர் ஜூபேர் அகமது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேரணாம்பட்டு நகரை சுற்றி எண்ணற்ற வஜ்ரம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகரின் மையப்பகுதியில் ஓடும் கால்வாயின் மூலம் பேரணாம்பட்டுஏரியில் விடப்படுகிறது.இந்த கால்வாயின் இருபுறமும் எண்ணற்ற வீடுகள் உள்ளன. கழிவுநீரானது சுத்திகரிக்கப்படாமல் விடுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்கள் பரவுகிறது. மேலும் பேரணாம்பட்டில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டு உப்புநீராக உள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகளுக்கு நகராட்சி மூலம் சீல் வைக்கவேண்டும் என அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் கோடைக் காலத்தையொட்டி சீரான குடிநீரை விநியோகிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதென்றும், தொகுதி மறுசீரமைப்பின் கீழ் பேரணாம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டதால் நகராட்சி இடத்தில் இயங்கி வரும் எம்.எல்.ஏ.,அலுவலகத்தை மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பெண்ணரசி சத்யா உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.