தினமலர் 31.03.2010
பிளாஸ்டிக் மீதான தடை விரைவில் விரிவாக்கம் : நகராட்சிகளில் முதற்கட்ட அமல்
ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தீவு பகுதியான ராமேஸ் வரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. இதனால் இயற்கை சார்ந்த பல்வேறு அபாயம் ஏற்படும் சூழல் உருவானது. இதை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் மீது தடை விதித்த போதும், அது பெயரளவில் நடைமுறையில் இருந்தது. இது குறித்து 'தினமலர்' தொடர்ந்து செய்தியின் வாயிலாக சுட்டிகாட்டி வந்தது. இதை யடுத்து, ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்தியது.இதன் விளைவாக இன்று ராமேஸ்வரத்தில் 75 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை அதிகாரிகள் கண்காணித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பிளாஸ்டிக் மீதான தடையை மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் படி முதற்கட்டமாக நகராட்சிகளில் இத் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இதன் மூலம் கடைகள், ஓட்டல்கள், சிறு வியாபாரி களிடத்தில் புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைய வாய்ப்புள் ளது. மீறி பயன்படுத்தப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பிளாஸ்டிக்ஒழிப்பில் ராமேஸ்வரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளோம். இதற்காக, நான்கு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட்டம் அமலுக்கு வரும் போது, பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இது போன்ற திட்டத்தை தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்தி, மாவட்டத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன் பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.