தினமணி 05.05.2010
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
மார்த்தாண்டம், ஏப். 4: பாகோடு, நல்லூர் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணிகள் நடைபெற்றன. பாகோடு பேரூராட்சியில் 7,8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரசார பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி பாளையங்கெட்டியில் துவங்கி கழுவன்திட்டை வரை நடைபெற்றது. பேரணியை பேரூராட்சித் தலைவர் ஜெயராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் வார்டு உறுப்பினர்கள் பாலம்மாள், மது மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நல்லூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பேரணியை செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுணன், உறுப்பினர்கள் ராஜசேகரன், செல்வராஜ், உள்ளிட்டோர் பேசினர். இந்த பேரணி பல்லன்விளை, கரவிளாகம், முளங்குழி, நெடுவிளை, பம்மம், வெட்டுமணி ஆகிய பகுதிகள் வழியாக சென்றது.