தினமலர் 20.04.2010
பெயரளவிற்கு நடந்த சோதனை கம்பத்தில் பாலிதீன் தாராளம்
கம்பம் : கம்பம் நகரில் பாலிதீன் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனை மேற்கொண்டதால், நகரில் பாலிதீன் பைகள் பயன்பாடு தாராளமாக உள்ளது. சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் வகையிலும், பெய்யும் மழை நீர் தரையில் இறங்காமல் செய்யும் பாலிதின் விற்பனையை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பயன்பாட்டை தடுக்க சுகாதார பிரிவினர், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாலிதீன் பைகள் மற்றும் ஒரு முறை ஊபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
கம்பம் நகராட்சியில் சில நாட்களுக்கு முன்பு சுகாதார அலுவலர்கள் சில கடைகளில் மட்டும் பெயரளவிற்கு சோதனை நடத்திவிட்ட சென்றனர். இதையடுத்து ஓட்டல்கள், டீ கடைகள், பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகள் என அனைத்து கடைகளிலும் பாலிதீன் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை தாரளமாக நடக்கிறது. பாலிதீன் விற்னையை தடுக்க பிற நகராட்சிகளில் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கம்பம் நகராட்சியில் மட்டும் பெயரளவிற்கு பாலிதீன் சோதனை நடத்திவிட்டு சென்றதால் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.