தினமணி 20.04.2010
மகளிர் குழுவினருக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி
காரைக்கால், ஏப். 19: பிளாஸ்டிக் பைகளுக்கு புதுவை அரசு தடை விதித்துள்ளதையொட்டி, காரைக்காலில் மகளிர் குழுவினருக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
திருமலைராயன்பட்டினம் பகுதியில் காகிதப் பை தயாரிப்புக்காக அப் பகுதியில் உள்ள 100 மகளிருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திங்கள்கிழமை மூன்று நாள் முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.சி.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.
அவர் பேசும்போது, புதுவை அரசு 5 மைக்ரானுக்குள்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அதை பொருள்படுத்தாமல் பயன்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது. சுகாதாரக்கேடு உருவாகக் கூடாது என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்தது. அதற்கு நாம் ஒத்துழைப்பு தரும் வகையில் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகிதப் பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் பேசியது:
ஒரு காகிதப் பை தயாரிக்க ரூ. 3.50 பைசா செலவாகிறது. பையின் இருபக்கமும் அரசு நிறுவனங்கள் விளம்பரம் தருவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பை தயாரிக்க 50 பைசா கூலியாக தரப்படும். நாளொன்றுக்கு 200 பை தயாரித்தால் ரூ. 100 வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் இதை கற்றுக்கொண்டு செய்ய முன் வந்தால், வெளியூரிருந்து பையை நாம் வரவழைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.
பயிற்சி முகாமில் ஊழியபத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தங்கள் கைவினை ஆசிரியர் கற்றுத்தந்த காகிதப் பை தயாரிக்கும் முறையை மகளிர் குழுவினருக்கு விளக்கினர். இதைத் தொடர்ந்து, சென்னை விப்ஜியார் தனியார் நிறுவனத்திலிருந்து வந்துள்ள வெங்கட்ராமன் என்பவர் பயிற்சி அளித்து வருகிறார்.