தினமலர் 29.04.2010
பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்
சேலம்: 'சேலம் மாவட்டம் ஏற்காட்டை, பிளாஸ்டிக் இல்லா சுற்றுலா தளமாக மாற்ற தீவிர விழிபுணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய, சேலம் உதவிபொறியாளர் பாண்டியன் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான ஏற்காடு பகுதியில், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்காட்டுக்கு கோடைகாலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பிளாஸ்டிக் கவர் உபயோகிப்பதை தவிர்க்க, சில நாட்களுக்கு முன், கலெக்டர் தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏற்காட்டில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. தடையை மீறி சுற்றுபுறச்சூழல் பாதிக்கப்படும் வகையில், யாரேனும் செயல்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.சேலம் மாவட்டத்திலும் பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க, கடந்த ஞாயிறு அன்று தாதகாப்பட்டி உழவர்சந்தையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளாஸ்டிக் கவர்களை பெற்றுக்கொண்டு, துணி பைகளை வழங்கினோம். மேலும், பொதுமக்களிடையே சுற்றுப்புறச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு வகையில் விழிபுணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாண்டியன் கூறினார்.