தினமலர் 29.04.2010
வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் திட்டம் துவக்கம்
செங்கம்: செங்கம் டவுன் தளவாய்நாய்க்கன்பேட்டையில், தி.மலை அமைதி அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கொரு மரக்கன்று வழங்கும் திட்டமான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, செங்கம் டவுன் பஞ்., தலைவர் பத்மா முனிக்கண்ணு தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜேஸ்வரி மாணிக்கம் முன்னிலை வகித்தார். அமைதி அறக்கட்டளை இயக்குனர் ராஜாராம் வரவேற்றார். பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்சர்தார், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் முருகையன், அறிவொளி அறக்கட்டளை இயக்குனர் செங்கண்மா முருகு, கல்வியாளர்கள் மாணிக்கம், சாரதா, சுப்ரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் கலிமுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
செங்கம் வனச்சரக அலுவலர் ஜெயராஜ், 400 மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது: இப்போது மலை, காடுகளில் சில சமூகவிரோதிகளால் மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், இயற்கையின் சீற்றத்தாலும் மரங்கள் அழிந்து வருகின்றன. மரங்கள் அழிவதன் காரணமாகத்தான் பூமியில் அதிக அளவு வெப்பம் வீசுகிறது. எனவே, விவசாயிகள் தங்களது நிலங்களின் மத்தியில் உள்ள வரப்புகளில் மரங்களை நட வேண்டும். மேலும், பிள்ளைகள் வீட்டுக்கொரு மரக்கன்றுகளை நட வேண்டும். இப்போது தலைவர்கள் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடுவது போல், பொதுமக்கள் தங்களது வீட்டில் நடக்கும் குழந்தைகள் பிறந்தநாள் விழா, திருமணநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளின் நினைவாக மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வனவர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் பரிதாநூருல்லா நன்றி கூறினார்.