தினமணி 08.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
குளித்தலை, ஆக. 7: கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பது விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவின் பேரில் நடைபெற்ற பேரணியை, பேரூராட்சித் தலைவர் தொடக்கிவைத்தார். செயல் அலுவலர் க. சண்முகம், துணைத் தலைவர் தி. அம்பிகா, வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேட்டுமருதூரில் உள்ள நடேசன் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கியத் தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியிலேயே முடிந்தது.
பேரணியில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அவற்றைத் தவிர்க்கும் முறை உள்ளிட்டவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றும், கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தும் சென்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருள்களின் தீங்கு குறித்து மேட்டுமருதூர், மருதூர் பகுதிபள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.