தினமணி 28.07.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
பெரியகுளம்,ஜூலை 27: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் கே. குணசேகரன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். ராஜேந்திரன், செயல் அலுவலர் எஸ்.டி. கணேசன், கவுன்சிலர்கள், காய்கறிக்கடை உள்பட பல்வேறு தரப்பட்ட வியாபாரிகள், திருமண மண்டப உரிமை யாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் மற்றும் தணணீர் பாட்டில்கள் ஆகியவற்றால் ஏற்படும் சுகாதாரக் கேட்டினைத் தவிர்க்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை கடந்த 16.7.12-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை மீறி விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே பேரூராட்சி மன்ற தீர்மானப்படி, விற்பனையாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர்கள் ஆகியோரிடம் அபராதக் கட்டணமாக ரூ 100 முதல் 500 வரை வசூல் செய்வது என்றும், மேலும் குடியிருப்புகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்தும் தன்னிச்சையாக தெருக்களில் குப்பைகளை கொட்டுவோரிடம் அபராதக் கட்டணமாக ரூ 100 முதல் 1000 வரை வசூல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
எனவே பிளாஸ்டிக் கழிவு இல்லாத பேரூராட்சியாக உருவாக்கவும், இப் பேரூராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தைப் பேணி பாதுகாக்கவும் பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.