தினமணி 26.07.2012
வேட்டவலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 25: வேட்டவலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவர் ஜெனார்த்தனம் தலைமை வகித்தார். வர்த்தக சங்கச் செயலர் சுந்தரமூர்த்தி பேசுகையில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதால் இப்போது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை பெருமளவு குறைத்து விட்டதாகத் தெரிவித்தார்.
செயல் அலுவலர் கணேசன் பேசுகையில், ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கைகளையும், அபராதமும் விதிக்கப்படும். தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
இக் கூட்டத்தில், பேரூராட்சி துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.