தினமலர் 25.07.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
தென்காசி : மேலகரம் டவுன் பஞ்.,சில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மேலகரம் டவுன் பஞ்., பகுதியில் மேலகரம், என்.ஜி.ஓ.,காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, பாரதிநகர், மின் நகர், நன்னகரம், குடியிருப்பு, இந்திராநகர் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.பிளாஸ்டிக் பயன்பாட்டால் மக்களுக்கு பல்வேறு தீமைகள் பற்றியும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்தும், மக்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு இருப்பது பற்றியும் டவுன் பஞ்., தலைவர் பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது குறித்து டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் கூறினார். பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வார்டுகள் தோறும், வீதிகள் தோறும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் சின்னத்துரை, இசக்கியாபிள்ளை, பாலகிருஷ்ணன், சிங்கத்துரை, செண்டு அம்மாள் மற்றும் வியாபாரிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.