தினமலர் 07.10.2010
பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் உள்ளாட்சிகள் ஈடுபடவேண்டும்: கலெக்டர் அழைப்பு
மதுரை: ""சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றை ஒழிக்கும் முயற்சியில் உள்ளாட்சிகள் ஈடுபடவேண்டும்,'' என கலெக்டர் காமராஜ் அறிவுறுத்தினார் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:பிளாஸ்ட்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள், விரிப்புகள் ஆகியவை கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. மட்கும் தன்மை இல்லாததால் அவை, சுற்றுச்சுழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு சில மாதம் காலஅவகாசம் அளித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுக்கவும், அவற்றை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் அழிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அதை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு உண்டு, என்றார்.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணராம், மூர்த்தி எம்.எல்.ஏ., யூனியன் தலைவர்கள் கண்ணன், லலிதா, புஷ்பலதா, பேரூராட்சி தலைவர்கள் அழகு உமாதேவி, இந்திராகாந்தி, கலாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.