தினகரன் 30.09.2010
தர்மபுரி நகராட்சியில் பிளாஸ்டிக் சேகரிக்கும் மாற்றுத்திறனாளிகள்
தர்மபுரி, செப்.30: தர்மபுரி நகராட்சியில் உள்ள 33வார்டுகளில் நாள்தோறும் 30 டன் கழிவு குப்பைகள் அள்ளப்படுகிறது. இதனை வாகனங்கள் மூலம் நகராட்சி ஊழியர்கள் சேகரித்து கொட்டுகின்றனர். இந்த சேவையில் தற்போது தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளி நலசங்க உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். இச்சங்கத்தில் உறுப்பினர்களாக 40 பேர் உள்ளனர்.
பொதுமக்கள் போடும் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இவர்கள் சேகரித்து விற்பனை செய்ய நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இச்சேவையை நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார் ராஜா நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் யுவராஜ், உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம், லயன்ஸ் சங்க தலைவர் ரவி, செயலாளர் லட்சுமி காந்தன், மாற்றுத்திறனாளிகள் நல சங்க நகர செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். யுவராஜ் கூறும்போது, நகராட்சி உள்ள மருத்துவமனைகள், தனியார் தங்கும்விடுதிகள் மற்றும் வர்த்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சில்லறை முறையில் சேகரித்து தரம் பிரித்து மொத்தமாக விற்பனை செய்ய உள்ளோம். முதல் கட்டமாக இப்பணியில் இறங்கிஉள்ளோம். போகப்போக மேலும் விரிவுப்படுத்தவும் உள்ளோம் என்று கூறினார்.