Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மாநகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அபாயம் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

Print PDF

தினமலர் 08.09.210

மாநகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அபாயம் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

மதுரை : மதுரை மாநகராட்சி மேலவாசல் பழைய இரும்பு, மரம் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்படுவதால், நகரின் நடுவே தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே இம்மார்க்கெட் அமைந்துள்ளது. இக்கடைகள் முன்பு, திலகர் திடல் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் இயங்கியவை. 1967ல் ஞாயிற்றுக் கிழமை சந்தையை காலி செய்ய அப்போதைய நகராட்சி உத்தரவிட்டது. அங்கிருந்த வியாபாரிகளுக்கு மேலவாசல் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பழைய இரும்பு, மரம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 146 வியாபாரிகள், காலி செய்துவிட்டு, மேலவாசல் இடத்தில் கடைகளை அமைத்தனர். சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் கடைகளை இவர்கள் நடத்துகின்றனர்.இக்கடைகளின் முன்னால், மேலவாசல் குடிசை மாற்று வாரிய வீடுகள் இருந்தன. பழுதடைந்த இவ்வீடுகள், அகற்றப்பட்ட பிறகு, அந்த இடம் காலி இடமாக இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது, ஏராளமான தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகரின் மற்ற இடங்களில் சேகரிக்கப்படும் பழைய பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் போன்றவை தள்ளுவண்டிகளில் இங்கு கொண்டு வந்து மார்க்கெட்டிற்கு தொடர்பு இல்லாதவர்கள், கழிவு பொருட்களை மூடைகளில் கட்டி, இங்கு குவிக்கின்றனர். இந்த பொருட்களை அங்கேயே கொட்டி, மீண்டும் விற்கக் கூடிய பொருட்களை பிரித்து எடுக்கின்றனர். இதனால் அந்த இடமே கழிவுகளின் மலையாக மாறி வருகிறது.

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குவிக்கப்படுவதால் அந்த இடத்தில் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தின் பின்புறத்தில் குவிக்கப் பட்ட குப்பைகளால், தீ விபத்து ஏற்பட்டு, சில கடைகள் எரிந்து சாம் பலாயின. அதே போன்ற விபத்து மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வளவிற்கும் இதற்கு அருகில் தீயணைப்பு நிலையமும், எதிரில் திடீர்நகர் போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது. இவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். கழிவு மூடைகளால், மார்க்கெட்டுக்குள் லாரிகள் வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியும் எதிரே உள்ள திடீர் நகர் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரை அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடி தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

Print PDF

தினகரன் 07.09.2010

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரை அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடி தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

புதுடெல்லி, செப். 7: காமன்வெல்த் விளையாட்டு போட்டியையொட்டி விளையாட்டு மைதானங்கள் உட்பட நகரம் முழுவதும் அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடிகள் பயன்படுத்தப்படும் என்று தோட்டக் கலைத்துறை தலைமை நிர்வாக அதிகாரி சுக்தேவ் சிங் கூறினார்.

இதுபற்றி சுக்தேவ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்காக நகரம் முழுவதையும் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சில் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லியை பசுமையான அழகிய நகரமாக மாற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக நகரச்சாலைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும், முக்கிய இடங்களிலும் பல்வேறு மலர்ச்செடிகளுடன் கூடிய மண்தொட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த மண் தொட்டிகளில் குரோட்டன்ஸ், செம்பருத்தி மற்றும் போகன் வில்லா போன்ற அழகிய மலர்ச்செடிகள் இருக்கும். இதற்காக சுமார் 40 லட்சம் மலர்ச் செடிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு மைதானங்களின் வாயில்களிலும் மலர்ச்செடிகளை வைத்து அழகுபடுத்த முடிவு செய்தோம். ஆனால் பாதுகாப்பு பணிகளை அது பாதிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானங்களில் எந்தெந்த இடங்களில் மலர்ச்செடிகளை வைக்கலாம் என்று இடங்களை தேர்வு செய்து கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம். அவர்கள் குறிப்பிடும் இடங்களில் மலர்ச்செடிகள் வைக்கப்படும். விளையாட்டு மைதானங்களைச் சுற்றிலும் மட்டும் அல்லாது பயிற்சி மைதானங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக அடிக்கடி கூடும் பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சுக்தேவ் சிங் கூறினார்.

 

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உறுதி

Print PDF

தினமணி 04.09.2010

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உறுதி

திருவண்ணாமலை, செப். 3: திருவண்ணாமலை நகரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நகரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிகமாக உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன், துணைத் தலைவர் செல்வம், எஸ்.கே.பி. கல்லூரி தலைவர் கு.கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் பிளாஸ்டிக் பொருள்களை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக வியாபாரிகள், வர்த்தக சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இரா.ஸ்ரீதரன் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீர் நிலத்தில் செல்லாத வகையில் தடுக்கிறது. மேலும் புதைச் சாக்கடை இணைப்பில் அடைப்பை ஏற்படுத்தி சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குகிறது. தமிழக அரசு உத்தரவை செயல்படுத்தும் வகையில் சுற்றுப்புறச் சூழலை காக்கவும், நகரின் அழகை பராமரிக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

வியாபாரிகள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதே போல் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன தகன எரிவாயு மேடை மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளையிடம் தரப்பட்டுள்ளது. அதை பராமரிக்க அனைவரும் தாராளமாக நிதியுதவு செய்யவேண்டும் என்றார்.

ஓட்டல் அதிபர்கள் உபாத்தியாயா, மண்ணுலிங்கம், சந்துரு, வர்த்தகர் சங்கம் சார்பில் செந்தில்மாறன், தொண்டு நிறுவன பிரதிநிதி சத்யன் உள்ளிட்டோர் பேசினர்.

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

நவீன தகனமேடை பராமரிப்புக்கு ரூ10 லட்சம் நன்கொடை வசூல்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் ரூ54 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன தகன எரிவாயு மேடை பராமரிப்புக்கு மொத்தம் ரூ10 லட்சம் நன்கொடை குவிந்துள்ளது.

இதன் பராமரிப்புப் பணி மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோரின் முயற்சியால் முதல்கட்டமாக |2.25 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தில் அனைவரும் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என தலைவர் ஸ்ரீதரன் வேண்டுகோள் வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓட்டல் அதிபர்கள் சங்கம், நகர வர்த்தகர்கள் சங்கம், பஸ் நிலைய வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் மூலம் |7.75 லட்சம் தொகை திரட்டப்பட்டது. தற்போது, நவீன தகனமேடை பராமரிப்புக்கு |10 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Page 73 of 135