தினமணி 18.08.2010
'பிளாஸ்டிக் ஒழிப்பில் மாணவர்கள் பங்களிப்பு சிறப்பு'
தக்கலை, ஆக. 17: பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டத்தை உருவாக்குவதில் சக்திமானாக விளங்கி பெரிதும் உதவியவர்கள் மாணவர்கள் என ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பெருமிதம் தெரிவித்தார்.
தக்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூஜ்யக் கழிவுத் திட்ட கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லாத மாவட்டமாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் பூஜ்யக் கழிவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நமது முன்னோர் குப்பைகளைச் சேமித்து உரமாக மாற்றி தோட்டங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் குப்பைகளை குவிக்கின்றனர்.
இந்நிலை மாற வேண்டும். எனவே அனைவரும் குப்பைகளை வெளியே கொட்டும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்த ராஜன், பயிற்றுநர் கிரிஜாமணி ஆகியோர் குறித்து பேசினர். கருத்தரங்கில், பூஜ்யக் கழிவுத் திட்டம் தொடர்பான குறுந்தகடு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகர்மன்ற ஆணையர் செல்லமுத்து, கல்குளம் வட்டாட்சியர் பால் சுந்தர்ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் வரவேற்றார். சுகாதார அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.