Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

6 ஆயிரம் லாரி கழிவுகள் அகற்றம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை முதல்வர் வைத்திலிங்கம் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 13.08.2010

6 ஆயிரம் லாரி கழிவுகள் அகற்றம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை முதல்வர் வைத்திலிங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆக. 13: புதுவை யில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரியதில் 6 ஆயிரம் லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள் ளது என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுவை நகரப்பகுதியில் சிறு மழை பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்கிவிடுகிறது. வாய்க்கால்களில் அடைப்பு சரி செய்து மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. மழை நீர் மற்றும் கழிவுநீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க கழிவுநீர் வாய்கால் தூர் வாரும் பணியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செய்து வருகிறது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு பொதுப்பணித் துறை, புதுவை, உழவர்கரை நகராட்சிகளின் பராமரிப்புக்கு உட்பட்ட கழிவுநீர் வாய்கால் தூர்வாரும் பணிக்காக ரூ.1.9 கோடி ஒதுக்கி பணியை தொடங்கியது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் வைத்திலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான், பொது சுகாதாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாணரப்பேட்டை உப்பனாறு பெரியவாய்க்கால், வம்பாகீரப்பாளையம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலும், புதுவை நகராட்சி பராமரிப்பில் உள்ள மரப்பாலம் பள்ளவாய்க்கால், தேங்காய்திட்டு ஐயனார் கோயில் வாய்கால், உழவர்கரை நகராட்சி பராமரிப்பில் உள்ள ரெயின்போ நகர் கழிவு நீர் வாய்க்கால், கருவடிக்குப்பம் சிங்கம்பார்க் கழிவு நீர் வாய்க்கால் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

புதுவை நகராட்சி சேர்மன் ஸ்ரீதேவி, ஆணையர் அசோகன், தலைமை பொறியாளர் மனோகர், கண்காணிப்பு பொறியாளர் மாந்தையன், செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

ஆய்வு பணிக்கு பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

மழைக்காலங்களில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை தேக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே கடந்த ஆண்டை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரம், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. கழிவுநீர் வாய்க்காலில் இருந்து இதுவரை 6 ஆயிரம் லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் ஆகியவை தூர்வாரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் 6 மாதங்கள் நடக்கும்.

பொதுமக்களின் நலனையே குறிக்கோளாக கொண்டு இந்த அரசு இதுபோன்ற பணிகளை செய்து வருகிறது. பொதுமக்கள் 50 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை அரசு தடை செய்துள்ளது. இதனை அமல்படுத்துவதில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். தடையை அமல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் அவற்றை சேகரித்து பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பிளாஸ்டிக் குப்பைகளை அரசு ஒதுக்கியுள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும்.

புதுவையில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுவை முழுக்க டிஜிட்டல் பேனர் மாதக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் சுப்பையா சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் பேனர் மின் கம்பியில் விழுந்து மின்தடை ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் அரசின் மேல் கோபமாக இருந்தார்கள். டிஜிட்டல் பேனர் வைத்த ஓரிரு நாட்களில் கழற்றி செல்வது தான் நாகரீகம். இதற்கு தலைவர்கள் அறிவுரைகளை கூற வேண்டும். புதுவை மக்கள் டிஜிட்டல் பேனர் கலாச்சாரத்தில்இருந்து விடுதலை பெற வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்த பின்பு கவுன்சலிங் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ| 6 ஆயிரம் அபராதம்

Print PDF

தினமணி 13.08.2010

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ| 6 ஆயிரம் அபராதம்

திருப்பூர், ஆக. 12: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதாக, திருப்பூரில் 4 கடைகளுக்கு தலா | 1,500 வீதம் | 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனையைப்க் தடுக்க மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திருப்பூர் மாநகரட்க் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். பழைய பஸ்நிலையம் எதிரிலுள்ள தினசரி மார்க்கெட், கேஎஸ்சி. பள்ளி சாலை, மங்கலம் சாலை, ஏபிடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவிர, சுகாதாரமற்ற தின்பண்டங்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் இருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பொதுசுகாதார சட்டத்தின் படி அக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சுமார் 25 கடைகளில் நடத்தப்பட்ட இச் சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 4 கடைகளுக்கு தலா |ரூ 1,500 வீதம் ரூ| 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இச் சோதனையில், ஆய்வாளர்கள் வெங்கடேஷ், ராமசாமி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

கட்டுரைகள்:மழைத்துளி... மழைத்துளி...!

Print PDF

தினமணி 12.08.2010

கட்டுரைகள்:மழைத்துளி... மழைத்துளி...!

கிராமம் என்றாலும், நகரம் என்றாலும், ஏழை என்றாலும், பணக்காரன் என்றாலும், தமிழன் என்றாலும், தெலுங்கன் என்றாலும், ஹிந்துவோ, முஸ்லிமோ, கருப்பனோ, வெள்ளையனோ, பேதமே பாராட்டாமல் எல்லோராலும் வாழ்த்தி வரவேற்கக்கூடிய ஒரு பொருள், மழை.

நகரத்தில் உள்ளவன், ""ஐயோ என்ன வெயில்' என்று பரிதவிக்கிறான். ""பயிர் வாடுகிறதே'' என்று கிராமத்தில் விவசாயி பரிதவிக்கிறான். ஆகாயத்தைப் பார்க்கிறான். ""மேகம் திறக்குதடி; மின்னிருட்டுக் கம்முதடி; இன்னும் கருக்குதடி; ஈசான மூலையிலே..... சித்திரையில் பார்த்துவிட்டோம் செல்லமழை பெய்யவில்லை. ஐப்பசியில் பார்த்துவிட்டோம் அடைமழை பெய்யவில்லை...'' என்று நாட்டுப்புறக்கவி பாடுகிறான்.

சித்திரையில் பெய்யாத மழை, ஐப்பசியில் பெய்யாத மழை - தை, மாசியில் பெய்து வெள்ளமாகப் பெருகிப் பல்லுயிர் குடித்துப் பெய்யாமல் கெடுத்தது போதாது என்று, பெய்து கெடுக்கிறது

இந்தியாவில் மழை எவ்வாறு பெய்கிறது? மழையின் வரையறை என்ன? இப்படி யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? இப்படி யோசித்தால் பள்ளியில் படித்த புவியியல் மறந்துவிட்டாலும் மீண்டும் ஒரு பாட்டு, "மேகங்கள் திரண்டுவந்தால் அதை மழையெனச் சொல்வதுண்டு' நினைவுக்கு வரும். இப்படித் திரளும் மேகம் எங்கோ மழையாகக் கொட்டலாம்.

""தென்மேற்குப் பருவக்காற்று மே மாதம் தொடங்குகிறது. வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபரில் வருகிறது...'' இது பள்ளியில் படித்த பாடம். தமிழில் செய்திகள் முடிந்தவுடன், வானிலைச் செய்தி அறிவிப்பாளர், ""வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு..."" என்பார். வெப்ப சலனம் இருக்கும். மழை எதுவும் இருக்காது என்று உடைத்துச் சொல்லலாமே. ""தாயே ஜக்கம்மா... ஆடி மழை பெய்யவில்லை... ஆவணி மழை பெய்யவில்லை...'' என்று பாடவேண்டியதுதான். இப்படியே தீபாவளி வந்துவிடும். வானிலை அதிகாரிகளுக்கு எல்லா தொலைக்காட்சியிலும் தினம் முகம்காட்டும் ஒரு சந்தர்ப்பமும் வந்துவிடும்...'' ""பாம்பனுக்குத் தென்கிழக்கில் 800 கி.மீ. தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, அது மெதுவாக வடமேற்குத் திசையில் நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யும். 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்...'' என்று வானிலை அதிகாரி பேசுவார்.

மறுநாள் காலையில் ஒரு துண்டு மேகம்கூட இல்லாமல் சூரியன் பளிச்சென்று உதயமாகும். கடல் அமைதியாக இருக்கும். மீனவர்கள் இந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்த மாட்டார்கள். மறுநாள் டி.வி.யில் விளக்கம் கிடைக்கும். அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலைகொண்டுவிட்டது என்றும் ""அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை...'' என பழைய பல்லவி தொடரும். 2, 3 நாள் கழித்து அக்குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திசைமாறி நேராக வடக்கு நோக்கி நகர்ந்து, கடலூரிலிருந்து 700 கி.மீ. தூரத்தில் மையமிடும். அதன்பின் கடலூரைவிட்டு சென்னை, நெல்லூர், விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகம் என்று திசைமாறி, கடைசியில் வங்கதேசத்தை புயல் தாக்கிய செய்தி வரும். அதன்பின் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்தமானுக்கு வரும்.

தை, மாசி எல்லாம் கடந்து பங்குனி மாதம் தமிழ்நாட்டில் புயலும், வெள்ளமும் தோன்றி, ஏரிகள் உடைந்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடு. வெள்ளத்தை வடித்துக் கடலுக்குள் விடுவார்கள். புயல் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் மடிவார்கள். இதுதான் மழையின் கதை? கதையல்ல தொடர்கதை!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மனித மனநிலையுடன் ஒப்பிடுவதற்குப் பொருத்தமாகப்படுகிறது. அதாவது, ""லோ ப்ரஷர்''. இதுதானே மழையின் காரணி. மற்றொரு சொல்லும் உள்ளது. அதுதான் ""டிப்ரஷன்'' இந்த லோ ப்ரஷர் அல்லது டிப்ரஷன் வங்காள விரிகுடாவில் தோன்றும்போது விவசாயிகளுக்கு ஹை ப்ரஷர் ஏற்பட்டுவிடும்.

தமிழ்நாட்டில் பெய்யும் என்று எதிர்பார்த்தால் அந்த லோ ப்ரஷர் ஆந்திர மாநிலத்திற்குத் திசைமாறிப் பெய்தால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வருவது "ஹை ப்ரஷர்', "டிப்ரஷன்'. இந்த லோ ப்ரஷர், அதாவது ஒரு குறைந்த காற்றழுத்தம் எப்படியெல்லாம் திசை மாறுகிறது? வங்காள விரிகுடாவில் தோன்றும் இக்குறைந்த காற்றழுத்தம் அந்தமானுக்குத் தெற்கே தோன்றி வடமேற்கில் நகருமா? வடக்கில் நகருமா? மேற்குத்திசையில் நகருமா? தெரியாது. ஒரிசாவில் எதிர்பார்க்கும் மழை தமிழ்நாட்டில் பெய்யலாம். தமிழ்நாட்டில் எதிர்பார்த்த மழை ஆந்திரப் பிரதேசம் செல்லலாம். இவ்வாறே திபெத்தியப் பீடபூமியிலிருந்து குறைந்த காற்றழுத்தம் தென்மேற்கில் மேகத்தைத் திரட்டி அப்பருவமழை உ.பி.யா, தில்லியா, ராஜஸ்தானா, பிகாரா, அசாமா, வங்கமா, கேரளமா, மகாராஷ்டிரமா, .பி.யா, குஜராத்தா, எங்கு கொட்டப் போகிறது என்பது யாருக்குத் தெரியும்? எங்கோ ஓரிடத்தில் பெய்வது உறுதி.

தென்மேற்குப் பருவக்காற்று வடகிழக்குப் பருவக்காற்றின் போக்கில் உருவாகும் "குறைந்த அழுத்தம்' மழைக்கு ஒரு காரணம் என்றால் "குறைந்த அழுத்தம்' ஏற்படும் காரணம் என்ன? இக்குறைந்த அழுத்தத்தின் ஆதார சுருதிகள் பசிபிக் சமுத்திரம், திபெத்தியப் பீடபூமி, யூரேசியாவின் பனிமூட்டம், வங்காள விரிகுடாவில் உள்ள நன்னீர் அளவு போன்றவை என்று கருத இடமுள்ளது.

குறைந்த அழுத்தம் என்பது சிறிய ஆற்றல். இந்தச் சிறிய ஆற்றல் 40,000 பில்லியன் டன் எடையுள்ள மழையைப் பல சமுத்திரங்களைத் தாண்டிப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் விண்வெளிப் பயணத்தில் சுமக்க வைத்துப் பின் தன்னிடம் நிலைகொள்ள வைக்கும்போது, அச்சிறிய ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்திவிட்டால் மனிதர்களுக்கு எந்த லோ ப்ரஷரும் வராது.

பருவம் தவறிப் பெய்தாலும் வெள்ளம் வராது. எப்படியும் இந்திய மண்ணில் 8760 மணிநேரத்தில் (365 24) 100 மணிநேரம் மழை பெய்வதாக ஒரு கணக்கு உள்ளது. இப்படிப்பட்ட குறைந்த ஆற்றலுள்ள மழையைப் பயன்படுத்தாமல் அணைகளில் சேமித்த நீரையும் ஆழ்துளைக் கிணறுகளையும் அல்லவா நம்புகிறோம்.

மாபெரும் அணைக்கட்டுகளைக் கட்டவும், இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டவும் கோடி கோடியாகப் பணம் செலவழிக்கிறோம். இந்தியாவின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கான தண்ணீரில் சுமார் 80 சதவீதம் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து பெறுகிறோம் என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையா? இப்படிக் கோடி கோடியாகப் பணம் செலவழித்தும்கூட இன்னமும் இந்திய விவசாயம் மானாவாரியாகத்தான் உள்ளது. சுமார் 70 முதல் 80 சதவீதம் விளைநிலங்கள் மானாவாரி. மானாவாரி என்றால் வானம் வழங்கும் மழை. இங்கு மானம் என்பது பூமியின் மானத்தைக் காக்கும் மேகஉடை. பலதூரம் கடந்து வாரி வரும் கருமேகம் கார் விளையவும், கரிசல் காடு விளையவும் பொழிந்து, பூமியை விளைவித்து, அவமானத்தைத் துடைக்கும் இந்த மானாவாரியை மானமுள்ள தமிழன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.

ஆயிரம் அடிக்குக் குழாய்ச் சுரங்கம் எடுத்தாலும், ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மழைதான் அடிப்படை. ஆகவே, மழை எப்போது பெய்யும் என்ற தவிப்புக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, எப்போது பெய்தாலும் எனக்குச் சம்மதமே என்று வரவேற்றால் விவசாயிகளுக்கு லோ ப்ரஷர் வராது. மில்லியன் பில்லியன் என்று பணம் செலவழித்து தேசிய நெடுஞ்சாலைகளைச் சமைக்கும் இந்திய நிபுணர்களால் இன்றுள்ள தண்ணீர் நெருக்கடிக்கு ஒவ்வொரு மழைத்துளியும் நமக்கு எவ்வளவு முக்கியம் என்றுணர்ந்து அவ்வாறு பெய்யும் மழையை அதே இடத்தில் சேமித்தோ பயன்படுத்தியோ மழையை ஒழுங்காக நிர்வாகம் செய்ய முடியாதா?

இனி மழைநீர் சேமிப்பு மக்களின் பங்கேற்பாக மாறி, மழைநீர் சேமிப்பு மக்கள் குரலாகவும், ஒரு தேசியகோஷமாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எதிர்கால நீர்த்தேவைக்கு நதிநீர் இணைப்பு என்றும் கடல்நீர் சுத்திகரிப்பு என்றும் செலவான திட்டங்களை ஒரு கணம் மறந்துவிட்டுப் பெய்யும் மழையைச் சரியாகப் பயன்படுத்திக் கடலில் கலக்கும் மழைநீரில் குறைந்தது 75 சதவீதம் தடுத்து நிறுத்தினாலே போதும். இந்திய தேசம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், தடுப்பணை, புல்வெளி, மரம் நடுதல் என்ற செயல்களுக்கு முன்னுரிமை வழங்கி மானாவாரியைப் பசுமையாக்குவதுடன் நகரங்களில் கூரைகளிலும் மேல்தளத்திலும் விழும் மழையைச் சேமிக்கப் பெரிய சம்புகள் கட்ட வேண்டும். அவரவர் குடிநீர்த் தேவையை அவரவர் வீட்டில் பெய்யும் மழையைக் கொண்டு நிறைவேற்றும் ஒரு திட்டம் வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் அப்படிச் சிலர் இயங்குவதை ஊடகங்கள் தெரிவிக்கும்போது அதை ஏன் ஒவ்வோர் இந்தியனும் பின்பற்றக்கூடாது? கிராமப்பகுதிகளில் ஏற்கெனவே நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் என்ற பெயரில் ஊரக வளர்ச்சித்துறை செயல்படுத்தி வந்தாலும், மழைநீர் சேமிப்புக்கான செயல்வடிவம் இல்லை. தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் ஒரு நடிகை தன் மேனி அழகையும் காட்டவே மழை பெய்வதாக மண்ணில் உள்ளவர்கள் எண்ணிக்கொள்வதை மாற்றி, மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் மண்ணில் நிலைநிறுத்தி வேளாண்மையில் வளம் காணவே மழை பெய்கிறது என்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணரும்நாள் எந்நாளோ? அந்நாளே பொன்னான திருநாள்.

 


Page 78 of 135