Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

திண்டுக்கல் நகரில் பாலித்தின் பைகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்த தாமதம்

Print PDF

தினகரன் 09.08.2010

திண்டுக்கல் நகரில் பாலித்தின் பைகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்த தாமதம்

திண்டுக்கல், ஆக. 9: பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாலித்தின் பைகளுக்கு திண்டுக்கல் நகரில் விதிக்கப்பட்ட தடை அமல் படுத்தப்படாததால் பாலித்தின் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுகிறது. திண்டுக்கல் நகரில் 80க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் உள்ளன. இங்கு குடிமகன்களுக்கு பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்கப்படுகின்றன. இறைச்சிக்கடை, பலசரக்குக் கடை, பழக்கடை உள்ளிட்ட பல கடைகளில் பாலித்தின் பைகள் மூலமே பொருட்கள் விற்கப்படுகின்றன. பயன்படுத்திய பிறகு பொதுமக்கள் கண்ட இடங்களில் பாலித்தீன் பைகளை வீசி எறிகின்றனர்.

இதனால் நகர் முழுவதும் பாலித்தின் பைகள் சிதறி கிடக்கின்றன. சிலர் பிளாஸ்டிக் கப்புகளை கழிவுநீர் ஓடையிலே கொட்டுகின்றனர். கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் திண்டுக்கல்லை குப்பை இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு நகர்மன்றத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ‘நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்ற பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பைகளுக்கு தடைவிதிக்க வேண்டும், கவுன்சிலர்களும் கட்சி வேறுபாடின்றி இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரிலும், கடைகளிலும் பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பை விற்பனை செய்யகூடாது. விற்பனை செய்தால் பாலித்தின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் கூறினார். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரில் பாலித்தின் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுகின்றன. நகராட்சி தீர்மானம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையாளர் லட்சுமி கூறுகையில், ‘இன்னும் ஓரிரூ நாட்களில் பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

 

மக்காத பிளாஸ்டிக்கினால் கேடு!: தடை செய்வது அவசியம்

Print PDF

தினமலர் 09.08.2010

மக்காத பிளாஸ்டிக்கினால் கேடு!: தடை செய்வது அவசியம்

சேலம்: மறு சுழற்சிக்கும் பயன்படுத்த முடியாமல், நிலத்தடி நீரை பாழ்படுத்துவதுடன், மாநகராட்சி பகுதிகளில் செல்லும் சாக்கடைகளில் அடைப்பை ஏற்படுத்தி ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் "கப்' களை மாநகராட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.சேலம் மாநகரை தூய்மைபடுத்த மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அதை அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பாரபட்சமின்றி ஒருமனதாக நிறைவேற்றம் செய்ய வேண்டும்.

தற்பொழுது மாநகரில் பல டீக்கடைகளில் பார்சல் டீ கொடுக்க பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்தி அதில் சுடச்சுட டீ ஊற்றி கொடுக்கின்றனர். அதனால், டீ குடிப்பவர்களுக்கு பல கெடுதலை ஏற்படுத்துகிறது. அதேபோல ஹோட்டல்களிலும் சாம்பார் வகைகளை பாலித்தீன் பைகளில் கட்டி கொடுக்கின்றனர். மழைக்காலங்களில் சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பை ஏற்படுத்தி, சாக்கடை தேங்கி மாநகராட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற தீங்குகளை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்களின் கெடுதல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். பொது இடங்களில் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏற்கனவே கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அவற்றை காலி செய்ய வலியுறுத்த வேண்டும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து பலசரக்கு கடைகள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள், குளிர்பானம் மற்றும் டீக்கடைகளில் மாநகராட்சியின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பதாக எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்கும் பணி நடக்க வேண்டும். மாநகராட்சி சார்பில், "இவ்விடம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதில்லை' என தட்டிகளை தயார் செய்து, ஒவ்வொரு கடைகளுக்கும் கொடுத்து அதை கடையின் முன் வைக்க சொல்ல வேண்டும்.ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து கெடு முடிந்தவுடன், மாநகராட்சி அதிகாரிகளை பல குழுக்களாக அமைத்து, அதிரடியாக பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மீறி விற்பவர்கள் மீது அபராதம், உரிமம் ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு என்று பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.ஆய்வு என்றால் பஸ் ஸ்டாண்ட், டீ கடைகள் என்பதோடு நில்லாமல் மாநகரம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்தினால், தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லா ஒரு முன்னோடி மாநகராட்சியாக சேலம் திகழும். மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், கண்டிப்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

 

பாலிதீன் பறிமுதல்: அபராதம்

Print PDF

தினமணி 06.08.2010

பாலிதீன் பறிமுதல்: அபராதம்

ராமேசுவரம், ஆக. 5: ராமேசுவரம் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 6,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

ராமேசுவரம் தீவு பகுதியில் பாலிதீன் பை, கப் போன்ற பொருள்கள் பயன்படுத்த கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் த.. ஹரிஹரன் தடை விதித்திருந்தார். ஆனாலும், இங்கு ஒரு சில கடைகளில் பாலிதீன் பொருள்களை பதுக்கி வைத்து விற்கப்பட்டு வந்தது. இதை, பாலிதீன் எதிர்ப்புக் குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை ராமேசுவரம் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலர் ஜபார், ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்புச் சங்கத் தலைவர் களஞ்சியம், நுகர்வோர் இயக்க துணைச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர், இங்குள்ள கோழி, ஆட்டிறைச்சி கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட 24 கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பதுக்கி வைத்திருந்த கடையின் உரிமையாளர்களிடம் ரூ. 6,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ஏற்கெனவே, பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், மீண்டும் விற்பனை செய்வது தெரியவந்தால், அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவர் என, வட்டாட்சியர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


Page 79 of 135