தினமலர் 04.08.2010
பிளாஸ்டிக்கிற்கு தடையால், பேப்பர் கவர்களுக்கு மவுசு!
போடி : போடியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுகள், டம்ளர்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டதால் பேப்பர் கவர்களுக்கு "மவுசு' ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், உறைகளை பயன்படுத்த கூடாது, மீறுவோறுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போடி நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மீறி விற்பனை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். ஜவுளிக் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை 10ம் தேதிக்கு பிறகு பயன்படுத்த கூடாது என நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் துணிப்பைகளை கொள்முதல் செய்ய துவங்கி விட்டனர்.தற்போது ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு கேரி பேக்கிற்கு பதிலாக பழைய பேப்பர்களை கவர்களாக மாற்றி போட்டு தருகின்றனர். ஓட்டல்களில் சாப்பாடு, டிபன் பார்சல் வாங்குபவர்கள் பாத்திரங்களையும், பைகளையும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.