தினகரன் 28.06.2010
நெல்லை மாநகராட்சியில் ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
நெல்லை, ஜூன் 28: நெல்லை மாநகரத்தில் வரும் ஜூலை முதல் வாரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒரே நாளில் நெல்லை மாநகராட்சி பகுதி முழுவதிலும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு அம்சமாக, ‘மாநகர தூய்மை முகாம்’ நடத்த நெல்லை மாநகராட்சி ஏற்பாடு செய்துள் ளது. இம்முகாமில் மக்களால் பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்பட்டு, சாலை யோரம் மற்றும் திறந்த வெளிகள், மைதானங்களில் தேங்கி கிடக்கும் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட உள் ளன. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 124 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 124 இடங்களிலும் மாநகர பகுதியிலுள்ள தன்னார்வ தொண்டர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 1,800 பேர், மாநகராட்சி பணியாளர்கள் 700 பேர் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவர். மேலும் பொது மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வித மாக துண்டு பிரசுரங்களை யும் இவர்கள் விநியோகிப் பர்.
இம்முகாமில் கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இம் முகாம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் நடைபெறும். இம் முகாமிற்கு பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்வோர் மீதும், பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசம் மட்டு மே ஒப்படைக்க வேண்டும். மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியே சேகரிப்பது முறைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
எனவே பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது டன், பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.