Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் வருகிறது தடை

Print PDF

தினகரன்         26.05.2010

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் வருகிறது தடை

மதுரை, மே 26: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மண்டலத்திற்கு ஒரு நாள் வீதம் 4நாட்கள் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி நேற்று வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் 2 ஆயிரம் பணியாளர்கள் ஒரே நேரத்தில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

இதனை பீபிகுளம் 4 ரோடு சந்திப்பில் மாவட்ட கலெக்டர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

மேயர் தேன்மொழி, ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், மண்டல தலைவர் இசக்கிமுத்து, சுகாதார அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை நகரில் இதன் மூலம் ஒரு நாளில் 400 மெட்ரிக் டன் குப்பை அள்ளப்படுகிறது.

மண்டலத்திற்கு ஒரு நாள் வீதம் 4 நாள் இந்த பணி நடைபெறும். தூங்கா நகரத்தை தூய்மையாக்கும் இந்த திட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைத்து குப்பையை தொட்டியில் கொட்ட வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. எனவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

தெருவில் கொட்டினால் அபராதம்

கலெக்டர் கூறும்போது, மாநகராட்சி குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பை கொட்ட வேண்டும். இதை மீறும் ஓட்டல், கடைக்காரர்களுக்கு ரூ.500 முதல் 2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி இதுவரை ரூ.இரண்டரை லட்சம் வரை மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது, என்றார்.

 

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமணி        26.05.2010

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருக்கோவிலூர், மே 25: திருக்கோவிலூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக்கேடு என பல வகையான தீமைகளுக்கு காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் கைப்பை உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருக்கோவிலூர் பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் குப்பை கழிவுகள் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றன. இவைகளால் இந்நகரத்தில் தூய்மைக்கேடு ஏற்படுவதோடு, வடிகால் மற்றும் கழிவுநீர் குழாய்களை அடைத்துக் கொள்வதுடன் நோய் பரப்பும் பூச்சிகள் பெருக வழிவகை செய்கின்றன.

இந்நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலேயே தொடர்ந்து கொட்டப்படுவதோடு, முக்கிய வீதிகளில் உள்ள பெரும்பாலான குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.

குறிப்பாக இப்பகுதியில் தென்பெண்ணை ஆறு, செவலை ரோடு, கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விதிமுறையை மீறி கொட்டப்பட்டு, விண்ணை முட்டும் அளவுக்கு மேடாக காட்சியளிக்கும் குப்பை மேடுகளின் அளவைக் குறைக்க அவ்வப்போது குப்பைகள் எரிக்கப்படுகின்றன.

இதனால் டையாக்சின் உள்ளிட்ட கொடிய நச்சு வாயுக்கள் வெளியாகுவதால் மக்களுக்கு புற்றுநோய், ஆண்மைக் குறைவு, நரம்பு மண்டல பாதிப்பு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் மாசடைந்து மக்களுக்கு பல்வேறு நோய் பரவும் நிலை உள்ளது.

இந்நிலையில் மழைக் காலங்களில் நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் போன்றவற்றை தடுக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்கி தந்துள்ளது.

மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற அரசின் விதிமுறை இருந்தும் கூட அதனை மீறும் அளவுக்கு இப்பேரூராட்சி நிர்வாகம் உள்ளது.

உதாரணமாக திருக்கோவிலூரை அடுத்த கனகனந்தல் ஊராட்சிப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்காக பேரூராட்சி நிர்வாகம் அதற்கான இடத்தை வாங்கியது.

இருந்தும்கூட தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே குப்பைகள் கொட்டப்படுவதே இதற்கு உதாரணமாகும். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்கும்போதெல்லாம் இன்னும் 15 தினங்களுக்குள் புதிதாக வாங்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் சொல்லளவில் நின்று போகிறது.

எனவே இந்நகரத்தில் மழைநீர் தேக்கம், குப்பை சிக்கல், தூய்மைக்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக் கேட்டுக்கு காரணமான பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைக் கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுத்து, அவைகளை விரைவாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்    20.05.2010

சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

சாத்தான்குளம், மே 20: சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை, பொருட் களை மக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரூராட்சி தலைவி தங்கத் தாய் தெரிவித்துள¢ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் பேரூராட்சியில் பகுதிகளில் மக்கள் குப்பைகளை கண்டபடி தெருக்களில் கொட்டி வருகின்றனர். அதனை பேரூராட்சி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினாலும், மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன.

பொதுமக்கள் கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டாமல் குப்பை வண்டியில் கொட்டி, சுகாதார நகரமாக மாற்ற உதவ வேண்டும்.

குப்பை கொட்டும் மையம் போதுமானதாக இல்லாததால் புறம்போக்கு நிலம் ஒதுக்கி தரக்கோரி கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதன்பிறகும் பிளாஸ்டிக் பை, பொருட் களை மக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Page 93 of 135