Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மாநகராட்சி ஒப்புதல்

Print PDF

தினமலர் 30.04.2010

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மாநகராட்சி ஒப்புதல்

சென்னை : சென்னை நகரில் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும், 'பிளாஸ்டிக்' பொருட்களை தடை செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்த பின், மேயர், நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை நகரில், ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் 20 'மைக்ரான்' அளவுள்ள பிளாஸ்டிக் பொருள் களை முற்றிலும் தடை செய்ய மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு அரசின் அனுமதி கிடைத் ததும், 20 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக்கில் தயார் செய்து விற்கப் படும் குடிநீர் பாக் கெட்டுகள், குளிர்பானங்கள் தடை செய்யப் படும். தற்போது விற்கப் படும் குடிநீர் பாக்கெட்களில் உள்ள தண்ணீர், சுத்திகரிக்கப்படாத நிலையில், 'கோலிபாம் பாக்டீரியா' மலக் கழிவுகள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், குடிநீர் பாக்கெட்கள் விற்பது தடை செய்யப்பட உள்ளது.மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தயாரித்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ரொட்டி, கேக், பிஸ்கட் போன்ற உணவு பண்டங்களில் பெரிய அளவில் தமிழில், தயாரிக்கப்பட்ட நாள், உபயோகிக்க கடைசி நாள் மற்றும் தயாரிப்பாளர் முகவரி, உணவில் உள்ள மூலக்கூறுகளை விவரமாக அச்சிட வேண்டும். இவ்விவரங்கள் இல்லாத உணவுப்பொருட்கள் தடை செய்யப்படும்.மாம்பலம் - நந்தனம் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 100 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கவும், மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில், 38 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கவும், தெற்கு பக்கிங்காம் கால்வாயின் நீர்பிடிப்பு பகுதியில், 34 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட ஒப்பந் தங்கள் கொடுக்க அனுமதி கொடுக் கப்பட்டுள்ளது.

சென்னை நகரில், நான்கு மண்டலங்களில் துப்புரவு பணி செய்யும், 'நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம், சரிவர பணியை செய்யவில்லை என்று புகார்கள் வருகின்றன.பலமுறை எச்சரித்தும், சட்டபூர்வமாக எச்சரிக்கை, 'நோட்டீஸ்' கொடுத்தும் பலனில்லை. இதனால், அந்த நிறுவனத்திடமிருந்து ஒரு மண்டலத்தின் துப்புரவு பணியை திரும்ப பெறுவது என மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்குள், துப்புரவு பணி செய்ய தேவையான ஊழியர்கள் மற்றும் வாகன தளவாடங்களை தயார் செய்து கொண்டு, ஒரு மண்டலத்தின் துப்புரவு பணி திரும்ப பெறப்படும் என்றார்.

Last Updated on Friday, 30 April 2010 05:51
 

அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே!

Print PDF

தினமணி 29.04.2010

கட்டுரைகள்

அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே!

அதிகரித்து வரும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரத்தின் அடையாளமாகத் தமிழகம் முழுவதும், ஏழை பணக்காரர், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், பெரியவர்கள் முதல் பள்ளிச் சிறுவர் வரை எல்லோரும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகிறோம்.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகளின் பல வகையான பாதிப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல நீரோடைகளை இன்றைக்கு குட்டைகளாக மாற்றியதில் இவ்வகை பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மலேரியா, யானைக்கால், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்களின் அசுர வளர்ச்சிக்கும் நீர்நிலைகள் மற்றும் சாக்கடைகளை பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரும் கண்டு கொண்டதற்கான அறிகுறிகளே இல்லை.

பிளாஸ்டிக் பொருள்கள் சாக்கடைகளை அடைத்துக் கொண்டு, கழிவுநீர் தெருவில் வழிந்தோடும் போது, அடைப்பை இயந்திரம் கொண்டு சரி செய்ய இயலாமல் போகிறது. இதனால், சக மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாதாளச்சாக்கடைகளுக்குள் இறங்க வேண்டிய நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

÷கோயில் அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம் முதல், உணவு விடுதிகளில் பார்சல் வரை, கையேந்தி பவன், டாஸ்மாக் பார்கள் முதல் அசைவக்கடைகள் வரை, ஆபத்தான மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேக்கேஜுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தனையும் பின்னர் சாலைகளையும், குப்பை மேடுகளையும் வந்தடைகின்றன.

நகரங்களில் துரத்தி விடப்பட்ட மாடுகளாய் இருந்தாலும் சரி, கிராமங்களில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படும் கால்நடைகளாய் இருந்தாலும் சரி, எல்லா உயிர்களும் மீந்த உணவுகளுடன் சேர்ந்து தூக்கி எறியப்பட்ட ஆபத்தான பிளாஸ்டிக்குகளை விழுங்கி விட்டு இறக்க நேரிடுகிறது. கன்றுக்குட்டிகள் கூட பிளாஸ்டிக்கை விழுங்கியதால் இறப்பது தமிழக கிராமங்களில் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஆண்டு சென்னை கால்நடை மருத்துவமனையில் இறந்து போன ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து, 45 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டபோது, மருத்துவர்களே திகைத்துப் போனார்கள்.

பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் விழுங்குவதால், பசு மற்றும் எருமைப் பாலில் எவ்வகையான நச்சுப் பொருள்கள் கலக்கின்றன எனும் ஆராய்ச்சியை சமீபத்தில் துவக்கியுள்ளது கால்நடைப் பல்கலைக்கழகம்.

÷கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவையும் மிதக்கும் பிளாஸ்டிக் துகள்களை விழுங்கிவிடுகின்றன. இப்படி, மீன் உணவாய் இருந்தாலும், பசும்பால், மாமிசம் போன்றவையாய் இருந்தாலும் உணவுச் சங்கிலியிலேயே பிளாஸ்டிக்கின் நச்சு, வேகமாகக் கலந்து வருகிறது.

÷இன்று பெரும்பாலான வீடுகளில், பல விதமான சாயங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்களில்தான் குடிநீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதுவும் மிகவும் ஆபத்து நிறைந்தது.

÷கோடைக்காலங்களில் குடம் சிறிது சூடாகும் போது கூட கசிவு மூலம், ஆபத்தான உலோகம் கொண்ட வேதிப் பொருள்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புகள் உண்டு.

÷இவை எல்லாவற்றையும் விட பரிதாபகரமானது, மறுசுழற்சி செய்யப்படும் சிறிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைதான். படிக்காத, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வகை ஆலைகளில் வேலை செய்கின்றனர்.

÷சில நேரம், ஆலையின் நிறுவனரே மறுசுழற்சி வேலையிலும் ஈடுபட்டிருப்பார். இவர்கள் எல்லோரும் மறுசுழற்சியின் போது வெளிப்படும் நச்சுக்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டு இருப்பவர்கள். நரம்புத்தளர்ச்சி, மலட்டுத்தன்மை, ஒவ்வாமை, சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, காசநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையில் தினமும் தவறாது வேலை செய்து வருகிறார்கள்.

அதேபோல, பெரும்பாலான மக்களின் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரம் வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் சேகரித்து எடுத்து மறுசுழற்சிக்குக் கொடுப்பதற்காக என்று ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். ÷இருபத்தோராம் நூற்றாண்டில் பெரும்பாலான தலித்துகளுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்து, ஓர் உள்ஜாதியை உருவாக்கி வைத்துள்ளோம். நவீனமயமாக்கலில் தோன்றிய விபரீத வருணாசிரமத்தின் இன்றைய புதிய வெளிப்பாடுதான் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள்.

÷நலிவுற்ற தாய்மார்கள் முதல் கஞ்சா நுகரும் சிறுவர்கள் வரை, சமூகம் வீசி எறிவதைச் சேகரித்து எடுத்து, வயிறு வளர்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். குப்பை வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த வளாகங்களுக்கு அருகில் வசிப்போருக்கு, மற்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

பெருங்குடி குப்பை வளாகத்துக்கு அருகில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் கூட "டையாக்சின்' போன்ற நச்சு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டுவந்தன.

2002-ம் ஆண்டு மே மாதம் இவ்வகை பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய ஆளும் கட்சியால், தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக்குக்கு எதிராக பொதுக்கருத்தும் உருவானது.

÷மசோதாவுக்கு ஆதரவாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு மணி நேரம் சட்டசபையில் பேசினார். ஆனால், பிளாஸ்டிக் நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினால், அன்று மதியம் நிறைவேற வேண்டிய மசோதா திடீரென்று அரசால் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் 2003-ம் ஆண்டு, 60 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை, இதனைப் பற்றிய நீண்ட மவுனமே, அரசின் பதிலாக உள்ளது.

கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பாக, இந்த மசோதாவைச் சட்டமாக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு தில்லி அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின.

தில்லி மட்டுமல்லாது, சண்டீகர், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், காஷ்மீர், மும்பை போன்ற பல மாநிலங்களிலும், நகரங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே மேற்சொன்ன மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு சட்டமாக்க வேண்டும்.

÷இவ்வகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு நஷ்ட ஈடோ, மானியமோ, வட்டியில்லாத கடன் வசதியோ அளித்து மாற்றுத் தொழில்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்விதமாக வேலை இழப்புகளைச் சரி செய்ய முடியும்.

ஆக, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.

அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

இத்தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தமிழ் மண்ணைப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் போக முடியும்.

 

வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் திட்டம் துவக்கம்

Print PDF

தினமலர் 29.04.2010

வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் திட்டம் துவக்கம்

செங்கம்: செங்கம் டவுன் தளவாய்நாய்க்கன்பேட்டையில், தி.மலை அமைதி அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கொரு மரக்கன்று வழங்கும் திட்டமான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, செங்கம் டவுன் பஞ்., தலைவர் பத்மா முனிக்கண்ணு தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜேஸ்வரி மாணிக்கம் முன்னிலை வகித்தார். அமைதி அறக்கட்டளை இயக்குனர் ராஜாராம் வரவேற்றார். பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்சர்தார், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் முருகையன், அறிவொளி அறக்கட்டளை இயக்குனர் செங்கண்மா முருகு, கல்வியாளர்கள் மாணிக்கம், சாரதா, சுப்ரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் கலிமுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செங்கம் வனச்சரக அலுவலர் ஜெயராஜ், 400 மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது: இப்போது மலை, காடுகளில் சில சமூகவிரோதிகளால் மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், இயற்கையின் சீற்றத்தாலும் மரங்கள் அழிந்து வருகின்றன. மரங்கள் அழிவதன் காரணமாகத்தான் பூமியில் அதிக அளவு வெப்பம் வீசுகிறது. எனவே, விவசாயிகள் தங்களது நிலங்களின் மத்தியில் உள்ள வரப்புகளில் மரங்களை நட வேண்டும். மேலும், பிள்ளைகள் வீட்டுக்கொரு மரக்கன்றுகளை நட வேண்டும். இப்போது தலைவர்கள் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடுவது போல், பொதுமக்கள் தங்களது வீட்டில் நடக்கும் குழந்தைகள் பிறந்தநாள் விழா, திருமணநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளின் நினைவாக மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வனவர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் பரிதாநூருல்லா நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 29 April 2010 06:50
 


Page 96 of 135