தினமலர் 23.04.2010
வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு மரக்கன்று நட திட்டம்
கோவை: 'ரோடு விரிவாக்கப்பணிகளின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் இரண்டு மடங்கு மரக்கன்றுகள் நடவேண்டும்' என, மாநகராட்சி சுற்றுச்சூழல் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி சுற்றுச்சூழல் கூட்டம் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. துணைமேயர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, நகரில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.
திருமணமண்டபங்கள், ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவுகளை தரம்பிரித்து குப்பை தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும். 20 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், டம்ளர்கள் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவை நகரில் ரோடு விரிவாக்கப்பணிகளின் போது, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் இரண்டு மடங்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி, ஆடு மாடு, இறைச்சிக்கழிவுகளை பயோபேக் மூலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க இறைச்சி கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாநகராட்சி குப்பை தொட்டிகளை நிரம்பி வழிய விடக் கூடாது. தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். குளங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவது, சாயப்பட்டறை மற்றும் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும். கோவையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மரம்வெட்டப்பட்ட இடங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நடவேண்டும். தனியாக விழா நடத்த வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் சாந்தா, உதவி நகர் நலஅலுவலர் சுமதி, சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து, கல்வி மற்றும் பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.