Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு 'சீல்' :பேரணாம்பட்டு நகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 31.03.2010

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு 'சீல்' :பேரணாம்பட்டு நகராட்சியில் தீர்மானம்

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டில் கழிவு நீரை திறந்துவிட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வஜ்ரம் தோல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் தலைவர் ஜூபேர் அகமது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேரணாம்பட்டு நகரை சுற்றி எண்ணற்ற வஜ்ரம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகரின் மையப்பகுதியில் ஓடும் கால்வாயின் மூலம் பேரணாம்பட்டுஏரியில் விடப்படுகிறது.இந்த கால்வாயின் இருபுறமும் எண்ணற்ற வீடுகள் உள்ளன. கழிவுநீரானது சுத்திகரிக்கப்படாமல் விடுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்கள் பரவுகிறது. மேலும் பேரணாம்பட்டில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டு உப்புநீராக உள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகளுக்கு நகராட்சி மூலம் சீல் வைக்கவேண்டும் என அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் கோடைக் காலத்தையொட்டி சீரான குடிநீரை விநியோகிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதென்றும், தொகுதி மறுசீரமைப்பின் கீழ் பேரணாம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டதால் நகராட்சி இடத்தில் இயங்கி வரும் எம்.எல்..,அலுவலகத்தை மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பெண்ணரசி சத்யா உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:09
 

தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF

தினமணி 29.03.2010

தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 28:நாகர்கோவிலில் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:

சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதித்தது, சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் விளம்பரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றம் கப்புகளை பயன்டுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தொண்டு நிறுவனங்களின் பங்கும் மகத்தானது என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் லால்மோகன், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை உதவி செயற்பொறியாளர் கிருபானந்தராஜன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் பெ. தமிழ் இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றன

 

விதிமீறிய கட்டடங்களில் 'கை!' : மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டம் : நடவடிக்கை இல்லை என்றால் நடவடிக்கை

Print PDF

தினமலர் 29.03.2010

விதிமீறிய கட்டடங்களில் 'கை!' : மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டம் : நடவடிக்கை இல்லை என்றால் நடவடிக்கை

ஊட்டி : ''நீலகிரி மாவட்டத்தில் விதிமீறிய 2,217 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில், அனைத்து அரசுத் துறை அலுவலர்களின் முக்கிய கூட்டம் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ராஜா பங்கேற்று, வனம் மற்றும் சுற்றுச்சூழல், விதிமீறிய கட்டடங்கள், மாநில அரசின் குடிசை மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்தார்.

மத்திய அமைச்சர் ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீதான நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் 1993 முதல் 2007ம் ஆண்டு வரை 2,217 கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன; இவற்றை இடிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை தவிர, உயர்நீதிமன்றத்தில் கட்டடம் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு வந்த பின், அந்த கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வரும் காலங்களில், மாவட்டத்தின் எப்பகுதிகளில் புதிய கட்டடம் கட்டப்பட்டாலும், நகரத் திட்ட அலுவலர், வருவாய் அலுவலர், வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை அனுமதி பெற வேண்டும். புதிய கட்டடம் கட்டும் போது, அனுமதியில் உள்ளது போன்ற கட்டடம் கட்டப்படுகிறதா? என்பது குறித்து, வருவாய் துறையினர் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்; விதிமீறி கட்டடம் கட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கான நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மலை மாவட்டமான நீலகிரியின் சுற்றுச்சூழலையும், வனங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; அப்போது தான், எதிர்கால பேரழிவுகளில் இருந்து இம்மாவட்டத்தை பாதுகாக்க முடியும். கடந்த நவம்பர் மாத பேரழிவின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் 95 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகளை கட்டுவதற்கான இடம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், குடிசை இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்றும் கணக்கெடுப்பு பணி, 29ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

சமவெளிப் பகுதிகளைப் போல இங்கு ஓலைக் கூரைகள் இல்லாததால், இங்குள்ள 'பிளாஸ்டிக்' மற்றும் பிற கூரைகள் உள்ள வீடுகளையும், திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் பேசி, சிறப்பு நடவடிக்கையின் அடிப்படையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆதிவாசி மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும்.

ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு 30 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 கோடி ரூபாய் மத்திய அமைச்சரவையின் ஓப்புதலுக்கு பின், விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தொகை வரும் பட்சத்தில், தொழிற்சாலை புனரமைக்கப்பட்டு, மீண்டும் பழைய பொலிவுடன் செயல்படும். இவ்வாறு, மத்திய அமைச்சர் ராஜா கூறினார். கதர்வாரியத் துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 29 March 2010 06:16
 


Page 104 of 135