தினமணி 10.03.2010
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
திருச்செநதூர், மார்ச் 9: சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வுடன் முன்வர வேன்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்செந்தூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி மூலம் கையாளுதல் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
திருச்செந்தூர் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று ஆன்மிக புகழ் பெற்ற முருகன் கோயில். மற்றொன்று குப்பைகள் நிறைந்த தூய்மைற்ற நகரம் என்பது.
இந்நகருக்கு ஆண்டுக்கு 60 முதல் 70 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்புமிக்க நகரம் பிளாஸ்டிக் குப்பைகளால் அழுக்கு நகரமாக விளங்குகிறது.
இதற்கு ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரிபேக், சிறிய பிளாஸ்டிக் தம்ளர், கப் உள்ளிட்ட மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களில் அதிக நச்சுத் தன்மை உள்ளது.
நாம் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள பாதி நச்சுக்கள் உணவுடன் கலந்துவிடுகின்றன. இதனால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்குரிய அபாயம் உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பொருள்களை ஆங்காங்கே தூக்கி எறிவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, கோயில் நகரான இந்நகரில் வணிக நிறுவனங்கள் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றில் மக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேர்த்துவைத்து, பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வரும்போது அவற்றில் குப்பைகளை போட வேண்டும்.
பொதுமக்களும் படிப்படியாக பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. சமூக பொறுப்புடன், உள்ளார்ந்த உணர்வுடன் முன்வர வேண்டும் என்றார் அவர்.
திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் வெ.ம.மகேந்திரன் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் இரா.பாக்கியம் தேவகிருபை, வட்டாட்சியர் இரா.இளங்கோ, காவல் துணைக் கண்காணிப்பாளர் க.நடராஜமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சீனிவாசன், திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் துரைசிங், "நிழல்' இயக்குநர் ம.ஜெயதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மெ.வீரப்பன் வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிராம் நன்றி கூறினார்