Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை

Print PDF

தினமணி 06.03.2010

பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை

திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல் நகரில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை விதித்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மார்ச் 5-ம் தேதி முதல் 15 நாளில் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து பொருள்களைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். ஆணையர் அர.லட்சுமி, பொறியாளர் ராமசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

.கல்யாணசுந்தரம் (மார்க்சிய கம்யூ.): சொந்தக் கட்டடங்களில் நடைபெறும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிக்க மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆர்.நடராஜன் (தலைவர்): சொந்தக் கட்டடங்களில் இயங்கும் சிறு தொழில்களுக்கு வீட்டுக்கு விதிக்கப்படுவதைப் போன்ற வரி முறை தான் பின்பற்றப்படும். வீடு, வர்த்தகம் எனத் தனியாக இல்லாமல் சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும், வீடுகள் போல் எண்ணி ஒரே வரி தான் விதிக்கப்படும்.

ஜெயபால் (அதிமுக): குப்பைகளை அள்ளும் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிகள், செப்பனிட விலைப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு?

நடராஜன் (தலைவர்): அரசு நிர்ணயித்த தொகையை அலுவலகத்தில் உள்ள அரசாணை மூலம் உறுப்பினர் பார்த்துக் கொள்ளலாம்.

.கல்யாணசுந்தரம்: நகரில் குப்பைகளை கொட்டுவதற்கான தொட்டிகள் பற்றாக்குறை காரணமாகக் கூடுதலாகத் தொட்டிகள் வாங்கத் தீர்மானம் போடப்பட்டிருந்தது. இந் நிலையில் பழுதாக உள்ள தொட்டிகளை மராமத்துப் பணி செய்ய அனுமதி கேட்கப்படுகிறது. 25 தொட்டிகளை மராமத்துக்கு அனுப்பினால் நகரில் சேரும் குப்பைகளை எடுக்க என்ன வழி?

நடராஜன்: நகரின் பல்வேறு இடங்களில் தொட்டிகள் வைப்பதற்காக மேலும் 20 தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. பழுதடைந்த தொட்டிகளை எடுத்துச் செல்லாமல் அவைகள் இருக்கும் இடத்திலேயே பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சந்திரசேகர் (திமுக): வேடபட்டியில் உள்ள எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தடைபட்டுள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் கூறியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புது ஒப்பந்தம் போட வேண்டும்.

துளசிராம் (அதிமுக): வேடபட்டி எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகளை செய்யாத ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து புது ஒப்பந்தம் போட வேண்டும்.

ஜெயபால் (அதிமுக): எரிவாயு தகனமேடை அமைக்க 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு வழங்கப்பட்டும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. தற்போது புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டால், கட்டுமானச் செலவுகள் கூடியுள்ள இன்றைய நிலையில் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது.

கோபாலகிருஷ்ணன் (பா..): எரிவாயு தகனமேடை அமைக்க ஒப்பந்ததாரர் இதுவரை செய்த வேலை என்ன?, அதற்காக அவருக்கு நகராட்சி கொடுத்த தொகை எவ்வளவு?

நடராஜன் (தலைவர்): எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்காக ரூ.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மின் மயானம் போல் எரிவாயு தகன மேடை சேவை வேண்டும் என்பதற்காகப் புது ஒப்பந்தம் கோரப்பட அனுமதி கேட்கப்படுகிறது. பழைய ஒப்பந்ததாரர் பணி செய்யாமல் விட்டுவிட்டதால் நகர்மன்றத்திற்கு அவர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்படும்.

ஜெயபால் (அதிமுக): திண்டுக்கல் நகரில் மோட்டார் பொருத்தி பல இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. வர்த்தக இணைப்புகளுக்கு குடிநீரை முறைப்படுத்தும் வால்வு பொருத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த முறைப்படுத்தும் வால்வு வீடுகளுக்கும் கொண்டு வரப்படுமா?.

நடராஜன் (தலைவர்): வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் தண்ணீரை அதிகமாக எடுக்கின்ற காரணத்தினால் குடிநீரை முறைப்படுத்தும் வால்வு பொருத்தப்பட உள்ளது. மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை நிறுத்தி விட்டால் அனைத்துக் குழாய் இணைப்புகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். விரைவில் பேரணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Last Updated on Saturday, 06 March 2010 06:05
 

மதுபானக் கூடங்களில் சோதனை: பிளாஸ்டிக் கப், தரமற்ற உணவு பறிமுதல்

Print PDF

தினமணி 03.03.2010

மதுபானக் கூடங்களில் சோதனை: பிளாஸ்டிக் கப், தரமற்ற உணவு பறிமுதல்

திருநெல்வேலி,மார்ச் 2: திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள மதுபானக் கூடங்களில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் பிளாஸ்டிக் கப், சுகாதாரக்கேடான உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் உத்தரவிட்டிருந்தார்.

ஆட்சியரின் உத்தரவை, மாநகர் பகுதியில் உடனடியாக செயல்படுத்துவதில் இடர்பாடு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற, திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், கடைகளில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவித்தது. இந் நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் அ.ரா. சங்கரலிங்கம், பி.காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாநகர் பகுதியில் உள்ள மதுபானக் கூடங்களில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

இச் சோதனையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 பிளாஸ்டிக் கப்புகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருள்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். சந்திப்பு,நகரம்,குறுக்குத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மதுபானக் கூடங்களில் இச் சோதனை நடைபெற்றது.

மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் இந்த திடீர் சோதனையால், அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Wednesday, 03 March 2010 09:12
 

அரசு மதுபான கடைகளில் மாநகராட்சிசுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை: பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பண்டங்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 03.03.2010

அரசு மதுபான கடைகளில் மாநகராட்சிசுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை: பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பண்டங்கள் பறிமுதல்


திருநெல்வேலி:நெல்லை அரசு மதுபானக் கடைகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரேயுள்ள டாஸ்மாக் கடை, ரதவீதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாரில் வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு தேதி இல்லாத பட்டாணி, மிக்சர், பேரிச்சம்பழம், சிப்ஸ், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் 6 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 1500 பிளாஸ்டிக் டம்ளர்களும், தயாரிப்பு தேதி இல்லாத 3 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்டம்ளர்களுக்கு தடை கிடையாதா:நெல்லை மாவட்டத்தில் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அதன் பயன்பாடு இன்னும் குறையவில்லை. குறிப்பாக ஒரு சில கடைகளை தவிர ஓட்டல்களில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்களும், டீக் கடைகளில் டீ, காப்பியும் பிளாஸ்டிக் கப்களிலேயே வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பாங்குகள், தனியார் அலுவலகங்கள், ஆஸ்பத்திரி கேன்டீன்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கு கடைகளில் டீ ஆர்டர் கொடுத்தால் பிளாஸ்டிக் கப்களிலேயே டீ வழங்கப்படுகின்றன.

நெல்லை டவுன், பாளை., மார்க்கெட் உள்ளிட்ட பகுதி கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை அதிக அளவில் தொங்கவிட்டு வியாபாரம் செய்கின்றனர். சைக்கிள், பைக்குகளில் டீ, காப்பி, சுக்குகாப்பி விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் கப்களையே பயன்படுத்துகின்றனர். இதே போல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் குறையவில்லை.

Last Updated on Wednesday, 03 March 2010 06:52
 


Page 108 of 135