தினமலர் 12.02.2010
பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்
கோவை : "பிளாஸ்டிக், பாலிதீன் இல்லாத கோவையை உருவாக்க தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்' என்று தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மொய்தீன் கான் பேசினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வார்ப்பட்டரை மற்றும் மின்முலாம் தொழிலகங்களில் சுற்றுச்சூழல் பேணுதல் குறித்த கருத்தரங்கம் கோவையில் நடந்தது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மொய்தீன் கான் பேசியதாவது:
தமிழகத்தில் ஆயிரம் வார்ப்பட (பவுன்டரி) தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 700 தொழிற்சாலைகள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ளன. இதில் பெரும்பான்மையாக சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளே அதிகமாக உள்ளன. இதில் 70 சதவீதம் குப்போலோ வகை உலைகளும், 30 சதவீதம் மின்சாரத்தால் இயங்கும் இன்டக்சன் வகை உலைகளும் பயன்படுத்துகின்றனர். உலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கழிவுகளை கட்டுப்படுத்த, ஈரவகை உறிஞ்சும் அமைப்புகளை பெரும்பாலான வார்ப்பட தொழிற்சாலைகள் நிறுவியுள்ளன.
இதன் செயல்திறனும் இயக்கமுறைகளையும், மேம்படுத்த வேண்டும். கோவையில் 150 வார்பட தொழிற்சாலைகள் குடியிருப்பு மற்றும் வணிகப்பகுதியில் இயங்கி வந்தன. இதில் 92 தொழிற்சாலைகள், சிறப்பு தொழில் மற்றும் அபாயகரமான நில வகைப்பாட்டிற்கு மறு வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மின் தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் அபாயகரமானதாக உள்ளது. இதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி வருகிறது.
மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை அழிப்பதற்கு சென்னையிலுள்ள சிமென்ட் நிறுவனத்துடன் பேசி புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நுட்பம் கோவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். செம்மொழி மாநாட்டையொட்டி, பிளாஸ்டிக், பாலிதீன் இல்லாத கோவை உருவாக்கப்படும். அதற்கு கோவையிலுள்ள தொழிலதிபர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
தமிழக அமைச்சர் பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ராமச்சந்திரன், தமிழக தொழிற்சாலைத்துறை இயக்குனர் சுந்தரமூர்த்தி, ஜி.ஐ.எஸ்., நிறுவன முதன்மை அலுவலர் சபிதா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.