Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ராமேசுவரத்தில் பாலிதீன் பைகளுக்குத் தடை: இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

Print PDF

தினமணி 22.01.2010

ராமேசுவரத்தில் பாலிதீன் பைகளுக்குத் தடை: இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

ராமேசுவரம், ஜன.21: ராமேசுவரம் தீவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து கோயில் மற்றும் சுற்றுலா இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும் என துணை ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் ராமேசுவரம் தீவு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர், மன்னார் கடலில் வாழும் அபூர்வ கடல் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு ஒவ்வாமை எனும் நோய் உருவாகுகிறது.

இதையடுத்து புனித தலமான ராமேசுவரம் தீவில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பனில் 60 சதவீதம் பாலிதீன் பைகள், கப்புகள் ஒழிக்கப்பட்டன.

இதை 100 சதவீதமாக மாற்றுவது குறித்து ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் துணை ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தாசில்தார் ரவீந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், பெட்காட் மாநிலப் பொருளாளர் ஜெயகாந்தன், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் நுகர்வோர் இயக்கத் தலைவர்கள் அசோகன், யூ.அருளானந்தம், பாண்டி, விபத்து மீட்பு சங்கச் செயலர் மகேஸ்வரன், யாத்திரை பணியாளர் சங்க துணைச் செயலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் பேசியது:

ராமேசுவரம் தீவில் இனிமேல் பாலிதீன் பை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலகம், கோயில், பள்ளிக் கூடங்களில் பாலிதீன் பை பயன்பாடு முற்றிலும் இல்லை.

இன்னும் ஒரு சில கடைகள் மற்றும் பகுதியில் பாலிதீன் பொருள்கள் விற்கப்படுவதாகத் தகவல் வருகிறது.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் தீவில் பாலிதீன் பொருளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அரசு சார்ந்த கோயில், சுற்றுலா துறை இணையதளத்தில் தகவல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விஷயத்தில் மீனவர்கள், வியாபாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Last Updated on Friday, 22 January 2010 10:53
 

பாலிதீன், பிளாஸ்டிக் தடை தீவிர அமல் நகராட்சி மார்க்கெட்டில் பயன்பாடு

Print PDF

தினமலர் 19.01.2010

பாலிதீன், பிளாஸ்டிக் தடை தீவிர அமல் நகராட்சி மார்க்கெட்டில் பயன்பாடு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஜன., 14 முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை,தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நகராட்சி மார்க்கெட் மற்றும் பள்ளி விழாக்களில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.ராமேஸ்வரம்,தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதியில் பொது இடங்களிலும்,ரோட்டோரத்திலும் மக்களால் வீசி எறியப்பட்ட பாலிதீன் பைகளை அகற்றும் வகையில், பள்ளி மாணவர்கள், தன்னார்வ ஊழியர்கள் பங்குபெற்ற மாஸ் கிளினீங், விழிப்புணர்வு ஊர்வலம் என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பாலிதீன் பைகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால், வர்த்தகர்களும் கடைகளில் பாலிதீன் பைகள் , பிளாஸ்டிக் கப்புகளை விற்பதை தவிர்க்கின்றனர். இங்குள்ள ஒருசில ஒட்டல் கள் தவிர , அனைத்து ஓட்டல்களிலும், பாலிதீன் பொருட்களில் உணவு பொருட்கள் கொடுப்பதும் தவிர்க்கப் பட்டுள்ளது.

மக்களும் பாலிதீன் பைகளுக்குப்பதில் துணிப்பைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். கடைகளிலும் பாலிதீன் பைகள் விற்பனை இல்லை என எழுதி வைக்கப்பட்டுள் ளது. இதனால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் ,பாலிதீன் பைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. ஆனால் ,ராமேஸ்வரம் நகராட்சி தினசரி மார்க் கெட்டில் நேற்று கூட பாலிதீன் பைகளில் காய்கறி, மீன் போன்றவை விற்பனை செய்யப் பட்டது. இங்குள்ள மளிகை கடைகளிலும் பாலிதீன்,பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொடுக்கப் பட்டது. "நகராட்சியில் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை,' என, இங்குள்ள வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர். இது போல் அரசு மதுபானகடை பார், சைக்களில் டீ விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகின்றனர். மேலும், பள்ளி விழாக்களில் பிளாஸ்டிக் கப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள்,பள்ளிகள்,அரசு சார்ந்த பிற நிறுவனங்களில் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க, முதலில் நடவடிக்கைஎடுக்க வேண்டும

Last Updated on Tuesday, 19 January 2010 06:40
 

மெரினாவில் குவிந்த பாலிதீன் குப்பைகள்

Print PDF

தினமணி 18.01.2010

மெரினாவில் குவிந்த பாலிதீன் குப்பைகள்

காணும் பொங்கலன்று பாலிதீன் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து அசுத்தமடைந்த மெரினா கடற்கரை.

சென்னை, ஜன. 17: சென்னை மெரினா கடற்கரையில் பாலிதீன் குப்பைகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்து கிடந்தன.சனிக்கிழமை காணும் பொங்கலன்று கூடிய சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற இந்த குப்பைகள் மெரினாவில் அழகைக் கெடுத்ததுடன், கடல் வளம் பாதிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரை பகுதிகளில் பாலிதீன் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாநகராட்சி தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் காணும் பொங்கலான சனிக்கிழமையன்று மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அன்றைய தினம் உலகின் நீளமான கடற்கரையான மெரினாவிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம், நீச்சல் குளம், கண்கவர் புல்வெளிப் பகுதி, அழகிய கடற்கரைக் காட்சி ஆகியவற்றைக் கண்டு ரசித்து காணும் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய மக்கள் அதிக அளவில் பாலித்தீன் கழிவுகளை விட்டுச் சென்றனர். கடந்த ஆண்டு ஜூன் 30}ம் தேதி கூடிய மாநகராட்சி கூட்டத்தில், 15.8.2009 முதல் மெரினா கடற்கரை நீளத்தில் 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பாலிதீன் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 15, 2009 முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. தடை அமல்படுத்தப்பட்ட ஓரிரு தினங்கள் மட்டுமே, பாலிதீன் பொருட்களை யாராவது கடற்கரைப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்களா? அல்லது விற்பனை செய்கிறார்களா? என மாநகராட்சி ஊழியர்கள் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. இப்போது பெரும்பாலான திண்பண்டங்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. வடை, நிலக்கடலை உள்ளிட்ட திண்பண்டங்கள் பிளாஸ்டிக் கவரில் தரப்படுகின்றன. இதற்கு மேலாக பாக்கெட் குடிநீர் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றைக் கண்காணிக்க இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி இனியாவது விழித்துக்கொண்டு மெரினாவில் பாலிதீன் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது போன்ற விஷயத்தில் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் அரசு கொண்டு வரும் திட்டங்கள் நிறைவேறும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Last Updated on Monday, 18 January 2010 06:43
 


Page 117 of 135