மாலை மலர் 05.05.2010
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.400 உதவித் தொகை மேயர் வழங்கி தொடங்கி வைத்தார்
சென்னை, மே. 5-
சென்னை மாநகராட்சி யும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் சிறப்பு முகாமை ரிப்பன் மாளிகையில் இன்று நடத்தின.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைவுடையோருக்கும் மற்றும் வாய்பேச முடியாத வர்களுக்கும் தகுதிகள் அடிப்படையில் மாதம் ரூ.400 உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளார். அதன் பொருட்டு, 213 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 400/- வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந் தோறும் வழங்கப்படும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியுள்ள நபர்களும் மற்றும் பாரதப்பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பெறும் கடன் தொகையில் தங்கள் பங்காக செலுத்த வேண்டிய 5 சதவீதம் பங்குத்தொகையை தமிழக அரசு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறு மேயர் கூறினார்.
முகாமில் ஆணையாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி, சென்னை மாவட்ட கலெக்டர் சோபனா, துணை ஆணையர் (சுகாதாரம்) பா. ஜோதி நிர்மலா, துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கோபிநாத், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் வரத குட்டி, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர், நல அலுவலர் டாக்டர் பெ.குகானந்தம், மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.